வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும்; அரசுக்கு, அ.தி.மு.க. வேண்டுகோள்


வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும்; அரசுக்கு, அ.தி.மு.க. வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Sep 2021 9:18 PM GMT (Updated: 4 Sep 2021 9:18 PM GMT)

வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும் என அரசுக்கு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் (ஆரணி) பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அன்னதான திட்டம்
சேவூர் ராமச்சந்திரன் (அ.தி.மு.க.) :- அ.தி.மு.க. ஆட்சியில் கோவில்களில் அன்னதானம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. 754 கோவில்களில் அன்னதான திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோவில், ஸ்ரீரங்கம் கோவிலில் தினமும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தி தமிழக அரசு தொடர்ந்து நடத்த வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் 11 ஆயிரத்து 500 கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
ரூ.28 கோடியில் திருச்செந்தூரில் யாத்திரீக நிவாஸ் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.3,702 கோடி கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டது. கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து நடத்த வேண்டும். காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசனத்திற்காக 48 நாட்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஒரு கோடியே 7 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கோவில்கள் திறக்க வேண்டும்
10 ஆண்டுகளில் பல்வேறு விருதுகள் இந்து சமய அறநிலையத்துறைக்கு கிடைத்தது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் கோவில்கள் திறந்திருக்க அரசு உத்தரவிட வேண்டும். இது பக்தர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.திருக்கோவில் என்ற பெயரில் தொலைக்காட்சி தொடங்கிட முடிவு செய்தோம், சில காரணங்களால் முடியவில்லை. நீங்கள் அந்த பணியை முடிக்க வேண்டும். கோவிலில் பணியாற்றுபவர்களை பணிவரன் முறை செய்வோம் என்று அறிவித்தோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

காகிதத்தில்...
அமைச்சர் பி.கே.சேகர்பாபு:-திருக்கோவிலில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை பணிவரன்முறை செய்யவோம் என்று அறிவித்தோம் என்று கூறினார். உங்களால் செய்ய முடியவில்லை. நாங்கள் செய்து காட்டுவோம். தொலைக்காட்சி தொடங்குவோம் என்று காகிதத்தில் எழுதி விட்டு சென்று விட்டீர்கள். நிதி எதுவும் ஒதுக்காமல் சென்று இருக்கிறீர்கள்.கருணாநிதி ஆட்சியில் 2006-2011 வரை இந்து சமய அறநிலையத்துறைக்கு செலவிடப்பட்ட தொகை ரூ.384 கோடியே 21 லட்சத்து 84 ஆயிரம், நீங்கள் 10 ஆண்டில் ரூ.332 கோடியே 47 லட்சத்து 37 ஆயிரம் தான் ஒதுக்கினீர்கள்.

ஏன் நிறைவேற்றவில்லை?
சேவூர் ராமச்சந்திரன் (அ.தி.மு.க.):-நாங்கள் அறிவித்தபடி 2,217 கோவில் பணியாளர்களுக்கு பணிவரன்முறை வழங்கப்பட்டது. தொலைக்காட்சிக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டியதில்லை. இந்து சமய அறநிலையத்துறை பதிவேட்டின் தொகுப்பு நிதியில் இருந்து தான் செயல்படுத்தப்படுகிறது. அரசு இதற்கு நிதி ஒதுக்காது. இதை அமைச்சருக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அமைச்சர் பி.கே.சேகர்பாபு:-தொலைக்காட்சிக்கு அரசாணைக்கு பிறப்பித்தீர்கள். அதன்பிறகு ஓராண்டு ஆட்சியில் இருந்தீர்கள். பிறகு ஏன் நீங்கள் நடைமுறைபடுத்தவில்லை. நீங்கள் விட்டு சென்றதை நாங்கள் நிறைவேற்றுவோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story