உள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம்: சீமான்


உள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம்: சீமான்
x
தினத்தந்தி 5 Sep 2021 9:56 PM GMT (Updated: 5 Sep 2021 9:56 PM GMT)

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சின்ன போரூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனார் உருவப்படத்துக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:

தமிழர் திராவிடர் இல்லாத அரசியல் இல்லை என்கிறார்கள். திராவிடரால் எங்களுக்கு ஒரு அரசியலும் இல்லை. தமிழர் இல்லாமல் இங்கு எவருக்கும் அரசியல் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடும் திட்டம் உறுதியாக உள்ளது. கடந்த முறை மக்கள் 12 சதவீதம் வாக்களித்தார்கள். இந்த முறை அதிக வாக்குகள் பெற்று முன்னேறி போவோம்.பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருள் விற்க தடை விதித்து இருப்பதை வரவேற்கிறோம். அதேபோல் டாஸ்மாக் கடையையும் மூடுவார்களா?. தி.மு.க. தற்போதுதான் முதல் முதலாக ஆட்சிக்கு வருவது போல் தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என்று கூறுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் என்ன செய்தீர்கள்?.

ரூ.100 கோடியில் பெரியாருக்கு சிலை வைப்பதற்கும், பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்ததுக்கும் என்ன மாறுபாடு உள்ளது?. 100 நாள் வேலை திட்டத்தில் தூர்வாரிய ஏரிகள் எத்தனை?, எவ்வளவு மரங்கள் நட்டுள்ளனர்?. சாலைகள் எவ்வளவு அமைத்தார்கள்?. 100 நாட்களுக்கு பதிலாக தற்போது 150 நாட்களாக மாற்றி வேளாண்மையை விட்டு பொதுமக்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story