உலக ஆணழகன் போட்டிக்கு தேர்வான தமிழக போக்குவரத்து போலீஸ்காரர்
சென்னை, அடையாறு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் புருஷோத்தமன்.
இவர், 2000, 2001-ம் ஆண்டுகளிலும், 2004 முதல் 2008-ம் ஆண்டுகள் வரையும், 2018-ம் ஆண்டும் என மொத்தம் 8 ஆண்டுகள் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு, 8 முறை “மிஸ்டர் தமிழ்நாடு” பட்டம் பெற்றவர். அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியிலும், தமிழக காவல்துறை சார்பாக ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 29-ந்தேதி, பஞ்சாப் தலைநகர் சண்டிகரில், உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியின் தகுதி தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். வரும் அக்டோபர் 1 முதல் 7-ந் தேதி வரை உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டியில் அவர் கலந்து கொள்கிறார்.
உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக காவல்துறையின் முதல் காவலர் என்ற சிறப்பை பெற்றுள்ள புருஷோத்தமன், உஸ்பெகிஸ்தான் சென்று வருவதற்கு நிதி இல்லாமல் தவித்தார். விமான டிக்கெட், தங்குமிடம், உணவு உள்ளிட்டவைகளுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் செலவாகும் என தெரிவிக்கும் அவர், தமிழக அரசும், காவல்துறையும் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
இந்த நிலையில் புருஷோத்தமனுக்கு ரூ.75 ஆயிரம் நிதிஉதவி வழங்கிய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவால் அவர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
Related Tags :
Next Story