தூத்துக்குடி அனல் மின்நிலையத்திலும் 71 ஆயிரம் டன் நிலக்கரி மாயம்: அமைச்சர் செந்தில்பாலாஜி


தூத்துக்குடி அனல் மின்நிலையத்திலும் 71 ஆயிரம் டன் நிலக்கரி மாயம்: அமைச்சர் செந்தில்பாலாஜி
x
தினத்தந்தி 7 Sep 2021 6:32 PM GMT (Updated: 7 Sep 2021 6:32 PM GMT)

வடசென்னையை போல தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் 71 ஆயிரத்து 857 டன் நிலக்கரியை காணவில்லை என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்திற்கு பிறகு, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்து பேசியதாவது:-

58 சதவீதம் மின் உற்பத்தி குறைவு
தமிழ்நாட்டில் 3 கோடியே 16 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. விவசாயத்திற்கு 22 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. கடந்த ஆட்சி காலத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதாக கூறி, 1 லட்சத்து 35 ஆயிரம் மின் இணைப்புகள்தான் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்ததாக சொல்பவர்கள் ஏன் விவசாயத்திற்கு மின் இணைப்பு வழங்கவில்லை. மின் வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில் கடந்த 10 ஆண்டுகளில் மின் திட்டப் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. 58 சதவீதம் அளவுக்கு மின் உற்பத்தி குறைந்துள்ளது.

அதிகரித்து காட்டுவோம்
2008-ம் ஆண்டு போடப்பட்ட திட்டங்களில் 2013-ம் ஆண்டுதான் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. அதிலும், 43 சதவீதம் அளவுக்குத்தான் மின் உற்பத்தி நடக்கிறது. தனியாரிடம் இருந்து மின் கொள்முதல் செய்வதற்காக இதுபோன்று செய்தார்களா? என்று தெரியவில்லை.வரும் ஆண்டில் மின் வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில் 58 சதவீதம் மின் உற்பத்தியை அதிகரித்து காட்டுவோம். அதுவே எங்கள் இலக்கு. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.1,200 கோடியிலான மின் திட்டங்கள் முடிக்கப்படவில்லை.

மின் வாரியத்திற்கு இழப்பு ஏன்?
தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்க ஏன் 25 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டார்கள். அதுவரை நம்மால் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியாதா?. ஒரு யூனிட் ரூ.7.10-க்கு வாங்கப்பட்ட சூரிய மின்சக்தியை, இப்போது ஆயிரம் மெகாவாட் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.61 என்ற விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்கொள்முதல் செய்வதால்தான் மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. மின் துறை என்பது சேவை துறைதான். அதற்காக, இவ்வளவு அதிகமான விலையில் மின் கொள்முதல் செய்வதா?. எனவே, வருங்காலங்களில் மின் துறையில் செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நிர்வாக சீர்கேடு
மின்வாரிய கடன் ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடியாக உள்ளது. தமிழக அரசின் கடனில் 3-ல் ஒரு பங்கு இதுவாகும். ஆண்டுக்கு வட்டியாக மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி செலுத்தப்படுகிறது. வரும் காலங்களில் நிர்வாக சீர்கேடு சரிசெய்யப்படும். மின்சாரம் தொடர்பான புகார்களை பெற மின்னகம் தொடங்கப்பட்டது. அதில் பெறப்பட்ட புகார்களுக்கு 97 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 485 டன் நிலக்கரி காணவில்லை. அதாவது, பதிவேட்டில் உள்ளது, இருப்பில் இல்லை.

தூத்துக்குடியிலும் நிலக்கரி மாயம்
அன்று மாலையே பேட்டியளித்த முன்னாள் மின் துறை அமைச்சர் தங்கமணி, நிலக்கரி காணாமல் போனது குறித்து விசாரிக்க அப்போதே குழு அமைக்கப்பட்டதாக கூறினார். எந்த குழு அமைக்கப்பட்டது. 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அனுப்பியதாக சொல்கிறார். அந்த குழுவின் விசாரணை அறிக்கை எங்கே?. தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் 71,857 டன் நிலக்கரியை காணவில்லை. அங்கேயும் பதிவேட்டில் உள்ளது. இருப்பில் இல்லை. எனவே, தவறு எங்கு ஏற்பட்டது?, எத்தனை ஆண்டுகளாக நடந்தது? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. ஆய்வு அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைன் மூலம் மது விற்பனை
ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக இங்கே தெரிவித்தார்கள். அப்படி எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story