நெல்லையில் ரூ.15 கோடியில் ‘பொருநை அருங்காட்சியகம்’: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Sep 2021 6:14 AM GMT (Updated: 9 Sep 2021 7:20 AM GMT)

நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் அகழாய்வுப் பணிகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். 

இந்நிலையில் நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “கீழடி அகழாய்வை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. கீழடி அகழாய்வை மத்திய அரசு பாதியில் கைவிட்டது. ஆனால் தற்போது கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு கீழடிக்கு நான் நேரில் சென்று பார்வையிட்டபோது, அங்கு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டது. தமிழ் சமூகம் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சங்க இலக்கிய சமூகம் என்று தெரிவித்தது கீழடி தொல்லியல் ஆய்வு.

பண்டைய நாகரிகம் கொண்ட மண் தமிழ்நாடு என்பதற்கு தொல்லியல் சான்றுகள் உள்ளன; 1990ல் கடல்சார் ஆய்வுக்கு பெரும் திட்டம் தீட்டியதும், பூம்புகாரில் கடலுக்கு அடியில் சில கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டதும் கலைஞரால்தான். வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை அமைத்தது, தமிழ் வாழ்க என எழுத வைத்தது, தமிழ் வழிபாட்டு உரிமை வழங்கியது, தமிழை கணினி மொழியாக்கியது, உலகம் முழுவதும் தமிழை பரப்பியது, செம்மொழி மாநாடு நடத்தியது என தமிழ் அரசை நடத்தியதுதான் திமுக அரசு.

கொற்கை, சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த, நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும். பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என்று அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக்கல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது. தமிழ் நிலப்பரப்பில் இருந்து வரலாற்றை எழுத வேண்டும் என்பதை அறிவியல் வழி நின்று நிறுவுவதே திமுக அரசின் லட்சியம். 

தமிழர் பண்பாட்டின் வேர்களை தேடி இந்திய நாடெங்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். கேரள மாநிலம் பட்டணம், ஆந்திராவின் வேங்கி, கர்நாடகாவின் தலைக்காடு, ஒடிசாவின் பாலூர் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்று அவர் தெரிவித்தார். 



Next Story