விநாயகர் சதுர்த்தி: ஓபிஎஸ்-ஈபிஎஸ் வாழ்த்து


விநாயகர் சதுர்த்தி: ஓபிஎஸ்-ஈபிஎஸ் வாழ்த்து
x
தினத்தந்தி 9 Sep 2021 11:28 AM GMT (Updated: 9 Sep 2021 11:28 AM GMT)

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

சென்னை,

இது குறித்து  ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வினை தீர்க்கும்‌ தெய்வமாம்‌ விநாயகப்‌ பெருமான்‌ அவதரித்த திருநாளான 'விநாயகர்‌ சதுர்த்தி' திருநாளை பக்தியுடனும்‌. மகிழ்ச்சியுடனும்‌ கொண்டாடும்‌ மக்கள்‌ அனைவருக்கும்‌ எங்களது உளம் கனிந்த விநாயகர்‌ சதுர்த்தி நல்வாழ்த்துகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

மக்கள்‌ நற்காரியங்களைத்‌ தொடங்கும்‌ போது, தங்குதடையின்றி சிறப்புடன்‌ நடைபெற விநாயகப்‌ பெருமானை முதலில்‌ போற்றி வணங்குவர்‌. விநாயகரைத்‌ துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால்‌ வெற்றியே விளையும்‌ என்பது மக்களின்‌ ஏகோபித்த நம்பிக்கையாகும்‌. 

முழு முதற்‌ கடவுளாம்‌ விநாயகப்‌ பெருமானின்‌ அவதாரத்‌ திருநாளாம்‌ விநாயகர்‌ சதூர்த்தி அன்று, களி மண்ணால்‌ செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம்‌ பூ மாலை அணிவித்து, அவருக்குப்‌ பிடித்தமான சுண்டல்‌, கொழுக்கட்டை, அப்பம்‌, அவல்‌, பொரி, பழங்கள்‌, கரும்பு போன்ற பொருட்களைப்‌ படைத்து, அறுகம்‌ புல்‌, மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால்‌ அர்ச்சனை செய்து விநாயகப்‌ பெருமானை மக்கள்‌ பக்தியுடன்‌ வழிபடுவார்கள்‌.

ஞானமே வடிவான திருமேனியைக்‌ கொண்ட விநாயகப்‌ பெருமானின்‌ திருவருளால்‌ உலகெங்கும்‌ அன்பும்‌, அமைதியும்‌ நிறையட்டும்‌ என்றும் நாடெங்கும்‌ நலமும்‌ வளமும்‌ பெருகட்டும்‌; வீடெங்கும்‌ மகிழ்ச்சியும்‌, மன நிம்மதியும்‌ தவழட்டும்‌ என்று வாழ்த்தி, விநாயகர்‌ சதுர்த்தித்‌ திருநாளை விமரிசையாகக்‌ கொண்டாடும்‌ மக்கள்‌ அனைவருக்கும்‌ எம்‌.ஜி.ஆர்‌, ஜெயலலிதா ஆகியோரது வழியில்‌ 'விநாயகர்‌ சதுர்த்தி" நல்வாழ்த்துகளை மீண்டும்‌ ஒருமுறை அன்போடு உரித்தாக்கிக்‌ கொள்கிறோம்‌.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story