ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Sep 2021 8:13 PM GMT (Updated: 9 Sep 2021 8:13 PM GMT)

தொடரும் சோகங்கள்: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்த பிறகு நிகழும் 2-வது விரும்பத்தகாத சம்பவம் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் 20-ந்தேதி விழுப்புரம் மாவட்டம், சேந்தனூர் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன், லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இப்போது போலீஸ்காரர் வேலுச்சாமி கொடூரமான முறையில் தற்கொலைக்கு முயற்சித்து உயிர் தப்பியிருக்கிறார். இத்தகைய கொடுமைகளும் சோகங்களும் இனியும் நடக்காமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். அதற்கான ஒரே தீர்வு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றுவதே ஆகும். ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால் ஏராளமான இளைஞர்கள் சொந்த பணத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் இழந்து தற்கொலை செய்துகொள்வதை தடுக்க முடியாது.

நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்றுவதுதான் இதற்கு தீர்வாகும். இதை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்திருக்கிறது. எனவே இனியும் தாமதிக்காமல் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட முன்வரைவை நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story