நலிவடைந்த மக்களை மேம்படுத்தவே வரிவிலக்கு ஐகோர்ட்டு தீர்ப்பு


நலிவடைந்த மக்களை மேம்படுத்தவே வரிவிலக்கு ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 Sep 2021 9:25 PM GMT (Updated: 9 Sep 2021 9:25 PM GMT)

நலிவடைந்தவர்களையும், ஏழை மக்களையும் மேம்படுத்துவதற்காக மட்டுமே வரிவிலக்கு அமைய வேண்டுமே தவிர, அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

இசை கருவிகளை தயாரிக்கும் தனியார் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், ‘‘இந்திய இசை கருவிகளுக்கு வரி விலக்கு அளிக்கும் அரசாணைப்படி, தங்கள் நிறுவனம் தயாரிக்கும் இசை கருவிகளுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும். வரி விலக்கு அளிக்க மறுத்த வணிக வரித்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜராகி வக்கீல், ‘‘இந்திய இசைக்கருவிகளுக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்கிறது. ஆனால், மின்னணு முறையில் உற்பத்தியாகும் மனுதாரர் நிறுவன இசைக்கருவிகளுக்க்கு வரிவிலக்கு வழங்க மறுக்க முடியாது’’ என்று வாதிட்டார்.

ஊக்குவிப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட அரசு வக்கீல் நன்மாறன், ‘‘தலைமுறை தலைமுறையாக இசைக்கருவிகளை தயாரிக்கின்ற, ஏழ்மை நிலையில் இருக்கின்ற கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகத்தான் வரிவிலக்கு வழங்கப்படுகிறது. மின்னணு முறையில் இயங்குகின்ற இசைக்கருவிகளுக்கு இந்த சலுகை வழங்க முடியாது’’ என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்டத்தில் வீணை, வயலின், கடம், மிருதங்கம், தவில், மகுடி, பஞ்சலோக வாத்தியம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை விற்பனை செய்யும்போது வரிவிலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

உரிமை இல்லை

வரிவிலக்கு என்பது சலுகை மட்டுமே. விதிகளுக்கு உட்பட்டு அளிக்கப்படும் அந்த சலுகையை உரிமையாக கோர முடியாது. வரிவிலக்கு அளிப்பதை வழக்கமாக பின்பற்றினால், பெரிய அளவிலான உற்பத்தியாளர்கள் அதிக லாபம் ஈட்ட வகை செய்து விடும். விலைவாசியால் பாதிக்கப்பட்டவர்களையும், நலிவடைந்தவர்களையும், ஏழை மக்களையும் மேம்படுத்துவதற்காக மட்டுமே வரிவிலக்கு அமைய வேண்டுமே தவிர, அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்திட கூடாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story