2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்


2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Sep 2021 9:50 PM GMT (Updated: 9 Sep 2021 9:50 PM GMT)

2024-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்களுக்கு, வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் திருச்சி வளாக திறப்பு விழா திருச்சி இருங்களூரில் நேற்று நடந்தது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனரும், வேந்தரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாரிவேந்தர் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் எஸ்.நிரஞ்சன் வரவேற்றார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருந்தவாறு காணொலிக்காட்சி மூலமாக எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் திருச்சி வளாகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

பதக்கங்களை இரட்டிப்பாக்க வேண்டும்

இதையடுத்து, வெங்கையா நாயுடு பேசியதாவது:-

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்களின் அபாரமான செயல்திறன் நாட்டு மக்கள் அனைவரையும் பெருமையில் ஆழ்த்தியது. 19 பதக்கங்களை வென்று சாதனை புரிந்த நமது பாராஒலிம்பிக் வீரர்களின் விடாமுயற்சியையும் நெகிழ்தன்மையையும் பாராட்டத்தக்கது. இது அவர்களது தலைசிறந்த செயல்திறன், மாற்றுத்திறன் குறித்த மக்களின் கண்ணோட்டத்தை மட்டும் மாற்றவில்லை.

விளையாட்டுத்துறையில் இந்தியா மாபெரும் சக்தியாக வளரும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான அவனி லெகராக்களும், நீரஜ் சோப்ராக்களும் வரிசையில் காத்திருக்கிறார்கள். ஒரு சிறப்பு சூழல் உருவாக்கப்பட்டால் அவர்களது திறமையை வெற்றிகரமாக வளர்க்க முடியும். இதனை கல்வி நிறுவனங்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும். 2024-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும். தனியார் துறையினர் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களும் நமது இளம் மற்றும் எழுச்சியூட்டும் தடகள வீரர்களுக்கு தேவையான ஆதரவு அமைப்புமுறையை அளிக்க வேண்டும்.

தனியார் துறை பங்கு

கபடி, கொக்கோ போன்ற இந்திய பாரம்பரிய விளையாட்டுகளை மிகப்பெரிய அளவில் ஊக்கப்படுத்தி அவற்றை பல்கலைக்கழகங்கள் மீட்கவேண்டும். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். இது சம்பந்தமாக, வலுவான கல்வி-தொழில்துறை இடையேயான இணைப்பை கட்டமைத்து, தொழில்துறைக்கு தேவையான திறன்களில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கையை நோக்கிய நேர்மறை பார்வையை மாணவர்கள் வகுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் தேசிய கட்டமைப்பில் பங்களிக்க வேண்டும். கல்வியை பிறரது நலனுக்காகவும், சமுதாயம் மற்றும் நாட்டின் நன்மைக்காகவும் பயன்படுத்த, தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். கல்வித்துறையில் அதிகாரமளிக்கப்பட்ட இந்தியாவின் கனவை நனவாக்குவதற்கு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளில் தனியார் துறையினரின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு தனியார் உயர் கல்வி நிறுவனங்களும் திறன்மிக்க இளைஞர்களை உருவாக்க முற்படவேண்டும்.

புகழ்

கொரோனா மருத்துவ சோதனைகளிலும், பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை குறைந்த செலவில் வழங்கவும் அரசுடன் ஒருங்கிணைந்து எஸ்.ஆர்.எம். குழுமம் பணியாற்றி வருவது பாராட்டத்தக்கது. தரமான கல்வியை நோக்கிய எஸ்.ஆர்.எம். குழுமத்தின் கவனம், தற்சார்பு இந்தியாவுக்கான அடித்தளம் அமைக்கும் அரசின் தொலைநோக்கு பார்வையுடன் ஒத்து இருக்கிறது.

நோபல் பரிசு வென்ற டாக்டர் சி.வி.ராமன், முன்னாள் ஜனாதிபதிகள் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், டாக்டர் வெங்கட்ராமன் உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகள் மற்றும் தேசிய தலைவர்கள் திருச்சியில் கல்வி பயின்றவர்கள். திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். வளாகம் அந்த நகரத்துக்கு மேலும் புகழ் சேர்க்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பன்வாரிலால் புரோகித்

இந்த நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், எஸ்.ஆர்.எம். குழும ராமாவரம் மற்றும் திருச்சி வளாக தலைவர் ஆர்.சிவகுமார், துணைவேந்தர் முத்தமிழ்செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story