பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட முயற்சி்; போலீசார் தடுத்ததால் பரபரப்பு


பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட முயற்சி்; போலீசார் தடுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Sep 2021 6:51 PM GMT (Updated: 10 Sep 2021 6:51 PM GMT)

கறம்பக்குடி, பொன்னமராவதி, அறந்தாங்கியில் இந்து முன்னணியினர் பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட முயன்றனர். அதை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கறம்பக்குடி, 
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஆண்டுதோறும் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பஸ் நிலையம், சீனி கடைமுக்கம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்து உள்ளது.
இந்தநிலையில் கறம்பக்குடியில் வழக்கம்போல் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட போவதாக இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று விடியற்காலையில் இருந்தே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் ஏராளமான போலீசார் சீனிகடைமுக்கம், பஸ் நிலையம் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். முதலில் கறம்பக்குடி பஸ் நிலையம் அருகே 4 அடி உயர விநாயகர் சிலையை வைத்து இந்து முன்னணியினர் வழிபட முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தி அந்த சிலையை கைப்பற்றினர்.
தொடர்ந்து சீனிகடைமுக்கத்தில் விநாயகர் சிலை வைக்க முயன்றபோது போலீசாருக்கும், இந்து முன்னணி மற்றும் பா.ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
விநாயகர் சிலையை வழிபட அனுமதிக்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களுடன் கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 5 நிமிடம் விநாயகர் சிலையை வழிபட அனுமதி வழங்கப்பட்டது. 
இதையடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் பூஜை செய்து வழிபட்டனர். இதைதொடர்ந்து 2 சிலைகளையும் போலீசார் திருமணஞ்சேரி கோவிலுக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைத்தனர். இச்சம்பவத்தால் கறம்பக்குடி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னமராவதி
பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு இந்து முன்னணி கட்சியினர் 3½ அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 
பின்னர் அனுமதியின்றி பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அந்த விநாயகர் சிலையை மீட்டு கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு ஆட்டோ மூலம் அனுப்பி வைத்தனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கி வடகரை முருகன் கோவில் வாசலில் நேற்று அதிகாலை இந்துமுன்னணியினர் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்த முயற்சி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பொதுஇடத்தில் விநாயகர் சிலை வைக்க தடை உள்ளது என தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த சிலையை கோவிலுக்கு உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்றனர். பின்னர் கோவில் திறக்கப்பட்டதும் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று அந்த விநாயகர் சிலையை வழிபட்டனர்.

Next Story