ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி பலி 24 பேருக்கு உடல் நிலை பாதிப்பு


ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி பலி 24 பேருக்கு உடல் நிலை பாதிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2021 9:27 PM GMT (Updated: 10 Sep 2021 9:27 PM GMT)

ஆரணியில் ஓட்டலில் சாப்பிட்ட 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தாள். 24 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 46). அரிசி ஆலை தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி (40). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு லோஷினி (10) என்ற மகளும், சரண் (14) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் 4 பேரும் கடந்த 8-ந்தேதி இரவு ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அசைவ ஓட்டலில் தந்தூரி உணவு வகைகளை சாப்பிட்டுள்ளனர்.

அதை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களுக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டு ஆரணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சிகிச்சை பெற்றனர். பின்னர் சிறுமி லோஷினிக்கு உடல் நலம் பாதிப்பு அதிகமானதால் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

24 பேர் பாதிப்பு

மேலும் அதே ஓட்டலில் சாப்பிட்ட 24 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸபத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சம்பவம் நடந்த அசைவ ஓட்டலில் உணவு மாதிரிகளை சேகரித்து விசாரணை நடத்தினார். ஆரணி நகர போலீசார் அந்த ஓட்டலுக்கு ‘சீல்’ வைத்தனர். சம்பவம் தொடர்பாக ஓட்டலின் உரிமையாளர் அம்ஜத் பாஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story