சட்டசபையில் வெளியிட்ட எந்த திட்டமும் அறிவிப்போடு நிற்காது: மு.க.ஸ்டாலின்


சட்டசபையில் வெளியிட்ட எந்த திட்டமும் அறிவிப்போடு நிற்காது: மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 Sep 2021 7:03 PM GMT (Updated: 11 Sep 2021 7:03 PM GMT)

எந்த திட்டமும் அறிவிப்போடு நிற்காது என்றும், அமைச்சர்களை நானே கண்காணிப்பேன் என்றும் அர்ச்சகர் களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 கோவில்களில் ஒரு கால பூஜை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை
இந்த கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மாத வருவாயின்றி பணியாற்றி வந்தது தெரியவந்தது. அதன்படி கடந்த 4-ந்தேதி சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின்போது ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக தலா ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் நேற்று ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அறிவிப்புகள்
கோவில் நிலங்கள் மீட்கப்படுகின்றன. கோவில் சொத்துக்களும் மீட்கப்படுகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தமிழில் வழிபாடு செய்யப்படக்கூடிய ஒரு அற்புதம் இந்த துறையின் மூலமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இறைவனை போற்றும் போற்றி பாடல் புத்தகங்கள் வெளியாகி உள்ளது. அர்ச்சகர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிதி, 15 வகையான பொருட்கள் தரப்பட்டுள்ளது.இன்னும் ஒரு அற்புதத்தை நான் சொல்லியாக வேண்டும். இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஒவ்வொரு துறையினுடைய மானிய கோரிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடந்தது. அவை எல்லாம் நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கிறது. தாக்கல் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு துறையின் சார்பில் ஒவ்வொரு அமைச்சர்களும், அவரவர்களுடைய துறையின் சார்பில் என்ன செய்யப்போகிறோம் என்பதை அறிவிப்புகளாக வெளியிடுவது வழக்கம்.

அறநிலையத்துறையின் பொற்காலம்
அந்த வகையில் அறநிலையத்துறையின் சார்பில் சேகர்பாபு இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பதில் அளித்து பேசினார். சட்டசபையில் இதுவரை இல்லாத வகையில், 120 அறிவிப்புகளை சேகர்பாபு அறிவித்தார். இது ஒரு பெரிய சாதனை. ஏராளமான கோவில் திருப்பணிகள் நடக்க இருக்கிறது. புதிய தேர்கள் வலம் வரப்போகின்றன. அதுமட்டுமல்ல, இதுவரைக்கும் இல்லாத வகையிலே, கோவில் சார்பில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. அதுதான் மிகமிக முக்கியமான ஒன்று.அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்பட உள்ளன. இவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டால் அறநிலையத்துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப் போகிறது, அந்த காட்சியை நாம் எல்லோரும் பார்க்கப் போகிறோம்.

13 ஆயிரம் குடும்பங்கள்
அந்த வரிசையில் இன்றைய நாள், ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 கோவில்களை சேர்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நான் தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலமாக அரசுக்கு ஆண்டு தோறும் ரூ.13 கோடி கூடுதலாக செலவாகும். இதை செலவு என்று நான் சொல்ல விரும்பவில்லை. இதன் மூலமாக ஏறத்தாழ 13 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறுகிறார்கள் என்பதை நினைத்து பெருமைப்படுகிறோம்.ஒரு கால பூஜை நடக்கும் கோவில்களுக்கான வைப்பு நிதி ரூ.2 லட்சமாக அதிகரித்தும் தரப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு கால பூஜை நடக்கும் கோவில்களில் வழிபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளின் வாழ்க்கைக்கும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நான் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிரடி அறிவிப்பு

பின்னர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, அதிரடி எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-

‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்றார் அண்ணா. இன்றைக்கு பாரதியாரின் நினைவு நாள் ஆகும்.

‘சிறியரை மேம்படச் செய்தால் பின்பு

எல்லோரையும் தெய்வம் வாழ்த்தும்' என்று மகாகவி பாரதி எழுதினார்.

அமைச்சர்கள் - அதிகாரிகள் கண்காணிப்பு
அந்த அடிப்படையில் தமிழக அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 13-ந்தேதியுடன் (நாளை) முடிய இருக்கிறது. அதன் பிறகு சட்டசபையில் என்னென்ன அறிவிப்புகளை செய்திருக்கிறோமோ, அவற்றை எல்லாம் படிப்படியாக ஒவ்வொன்றாக நிறைவேற்ற அதற்கான திட்டங்களை நாங்கள் வகுத்து இருக்கிறோம். வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது.அதனை மாதந்தோறும் நானே கண்காணிக்கப்போகிறேன். அவ்வப்போது ஆய்வுக்கூட்டங்களை நடத்தி அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே கண்காணிக்க போகிறேன். ஒவ்வொரு திட்டங்களுக்கும் நான் முன்னுரிமை கொடுத்து, அதையெல்லாம் நிறைவேற்றுகின்ற முயற்சியிலே நிச்சயம் நான் ஈடுபடப்போகிறேன்.

அமைச்சர் செயல்பாபு
அனைத்து துறைகளையும் முந்திக்கொண்டு இப்போது நம்முடைய அமைச்சர் ‘செயல்பாபு' அவரது துறை சார்பில் திட்டத்தை தொடங்கி விட்டார். இன்னும் சட்டசபை கூட்டத்தொடரே முடிந்து, ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவில்லை.
அதற்கு முன்பே ஒரு வார காலத்தில் இந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறார் என்றால் அவர் சேகர்பாபு அல்ல, செயல்பாபு என்று தெரிவித்துக்கொண்டு, அனைத்து அறிவிப்புகளையும் நிச்சயமாக நான் நிறைவேற்றுவேன் என்ற உறுதியை அளிக்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

பங்கேற்பு
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., ஹசன் மவுலானா எம்.எல்.ஏ., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்திரமோகன், இந்துசமய அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், திருவாவடுதுறை ஆதீனம் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், ராமநாதபுரம் சமஸ்தானத்தின் பரம்பரை தர்மகர்த்தா ராணி ராஜராஜேஸ்வரி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story