மாணவர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட தனுஷின் குடும்பத்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை,
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சிவகுமார் - ரேவதி தம்பதியின் மகனான தனுஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக டாக்டர் ஆக வேண்டும் கனவுடன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார்.
ஆனால், அந்த இரண்டு முறையும் அவர் தேர்வில் தோல்வியுற்ற நிலையில், மூன்றாவது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்தார். இந்நிலையில், இரவு 1 மணி வரை தனது தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த தனுஷ், இரவு 1 மணிக்கு மேல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், தனுஷின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தனுஷின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடரும், மாணவர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்க்கு முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story