‘நீட்’ தேர்வு குறித்து சில வார்த்தைகள் நீக்கம்: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு


‘நீட்’ தேர்வு குறித்து சில வார்த்தைகள் நீக்கம்: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
x
தினத்தந்தி 13 Sep 2021 6:10 PM GMT (Updated: 13 Sep 2021 6:10 PM GMT)

‘நீட்’ தேர்வு குறித்து சில வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அ.தி.மு.க. வெளிநடப்பு
சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, ‘நீட்’ தேர்வு தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது அவர், ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம்’’ என்று சொன்னீர்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து இன்னும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படவில்லை. ஆனால் தொடர்ந்து ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என்ற செய்தியை சொல்லி வந்த காரணத்தால் பல மாணவர்கள் தங்களை ‘நீட்’ தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ள முடியவில்லை. அதனால் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள முடியாத காரணத்தால் மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இறந்த மாணவரின் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவி வழங்க வேண்டும். அதோடு கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்றார். மேலும் அவர் தி.மு.க. அரசு குறித்து ஒரு வார்த்தையை குறிப்பிட்டார்.

சபாநாயகர் அப்பாவு:- ‘‘நீட் தேர்வால் இதற்கு முன்பு 13 பேர் இறந்து இருக்கிறார்கள். இந்த 13 பேர் இறந்ததற்கு இன்னொரு கட்சியை சொல்ல முடியாது’’ எனவே நீங்கள் பேசிய வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

மு.க.ஸ்டாலின்

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

‘நீட்’ தேர்வை தடுத்து நிறுத்தி 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவ கல்வியில் சேர்த்தவர் கருணாநிதி. ஏன், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூட ‘நீட்’ தேர்வை நடத்த அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய இவர், முதல்-அமைச்சராக இருந்தபோதுதான் ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டில் முதன் முதலில் நடத்தப்பட்டது. ‘நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று இதே சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதும், எதிர்க்கட்சி தலைவரான இவர், முதல்-அமைச்சராக இருந்தபோதுதான். ‘நீட்’ தேர்வு அச்சத்தில், அனிதா உள்பட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது உங்கள் ஆட்சியில்தான். ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட ‘நீட்’ மசோதாவை இந்த அவைக்கு சொல்லாமல் மறைத்ததும் அ.தி.மு.க. ஆட்சிதான். அதாவது, எதிர்க்கட்சி தலைவர், முதல்-அமைச்சராக இருந்தபோதுதான். இப்போது உயிரழந்த மாணவர் தனுஷ் இருமுறை ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததும் நீங்கள், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோதுதான்.

மரண அமைதி காத்த அ.தி.மு.க. அரசு
மத்திய அரசுடன் கூட்டணியாக இருந்தீர்கள். இப்போதும் இருக்கிறீர்கள். சி.ஏ.ஏ. மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டு போட வேண்டும் என்ற நிலை வந்தபோது, பா.ஜ.க. கூறியபோது, ‘நீட்’ தேர்விற்கு விலக்கு தர வேண்டும் என்று அ.தி.மு.க. நிபந்தனை விதித்து இருக்கலாம். அந்த தெம்பு, திராணி அ.தி.மு.க.விற்கு இல்லை. அதை செய்திருந்தால், ‘நீட்’ தேர்வுக்கு ஓரளவிற்கு விலக்கு கிடைத்திருக்கும். ஆனால் ‘நீட்’ தேர்வால் மாணவச் செல்வங்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து, ஆட்சி நடத்தியதுதான் அ.தி.மு.க. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சட்ட மசோதாவை நான் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். ஆகவே, ‘நீட்’ தேர்வை ரத்து செய்து, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்வியில் மாணவர்களை சேர்க்க இந்த அரசு அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கருப்பு ‘பேட்ஜ்’

சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டை பைகளில் கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து வந்தனர். ‘நீட்’ தேர்வு காரணமாக மாணவர் மரணம் அடைந்ததால் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்ததாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

Next Story