ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை வெளியேற்ற அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்


ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை வெளியேற்ற அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்
x

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை வெளியேற்ற அனுமதி கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு 2 வாரம் காலஅவகாசம் அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஸ்டெர்லைட் 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் அனைத்து அனுமதியையும் பெற்று தொடங்கப்பட்டது. மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூடப்பட்டது. ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக அவசரகால நிலையை கூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.நிறுவனத்தின் உள்ளே ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல மூலப்பொருட்கள் உள்ளன. அவசர கால நிலைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக்கோரிய மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து நிறுவனத்தின் உள்ளே உள்ள ஆபத்தான மூலப்பொருட்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டது.இந்தநிலையில் கொரோனா 2-ம் அலையின் போது 2,132.64 டன் திரவ நிலை ஆக்சிஜன் மற்றும் 7,833 மெட்ரிக் கியூப் மருத்துவ ஆக்சிஜன் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காக உள்ளூர் உயர்மட்ட குழு அனுமதி பெற்று 250 ஊழியர்கள் வேலை செய்தனர்.

கழிவு பொருட்கள்
தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெயை வெளியேற்றவும் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் எந்திரங்களை சரி செய்ய உள்ளூர் உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதுவரை எந்த பதிலும் இல்லை.எனவே ஆக்சிஜன் தயாரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகளை வெளியேற்ற அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே இங்கு வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றவும் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பதில் அளிக்க கால அவகாசம்
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க கூடுதலாக 2 வார கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


Next Story