தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி சனிக்கிழமை பதவி ஏற்கிறார்


தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி சனிக்கிழமை பதவி ஏற்கிறார்
x
தினத்தந்தி 13 Sep 2021 7:03 PM GMT (Updated: 13 Sep 2021 7:03 PM GMT)

தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி சனிக்கிழமை பொறுப்பு ஏற்க உள்ளார். பன்வாரிலால் புரோகித் இன்று பஞ்சாப் புறப்பட்டுச் செல்கிறார்.

இன்று புறப்படுகிறார்
தமிழகத்தின் 14-வது கவர்னராக மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி பொறுப்பு ஏற்றார். இவர், பஞ்சாப் மாநில கவர்னராக சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார்.பன்வாரிலால் புரோகித் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து பஞ்சாப் புறப்பட்டு செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைக்க உள்ளனர்.

சனிக்கிழமை பதவி ஏற்கிறார்
இதற்கிடையே நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆர்.என்.ரவி நாளை மறுதினம் (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். தமிழகத்தின் 15-வது கவர்னராக அவர் சனிக்கிழமையன்று பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Next Story