கோடநாடு வழக்கை நடத்துவோம்; உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்


கோடநாடு வழக்கை நடத்துவோம்; உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 13 Sep 2021 7:42 PM GMT (Updated: 13 Sep 2021 7:42 PM GMT)

கோடநாடு வழக்கை நடத்துவோம். உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து கூறியதாவது:-

வழக்கை நடத்துவோம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முகாம் அலுவலகமாக செயல்பட்ட கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொள்ளை, கொலை சம்பவங்களில் தொடர்புடையோர் கைது செய்யப்பட எவ்வளவு காலம் ஆனது என்பதையும் சற்று நீங்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும். காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது கடந்த 9-ந்தேதியன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர், ‘கோடநாடு வழக்கை நடத்துங்கள், வேண்டாமென்று சொல்லவில்லை; புது விசாரணை செய்யுங்கள், நாங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை' என்று சொன்னார்கள். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கோடநாடு வழக்கை நடத்துவோம். உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது என்பதை இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ‘வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது; வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள்மீது குற்றம்சாட்டுவதைத் தவிர்க்க வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்றைக்குச் சொன்னார். கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது இந்த அவையிலே கோடநாடு வழக்கு பற்றி முதலில் பேசியது யார்? எதிர்க்கட்சித் தலைவர் தான்.

மனு கொடுத்தார்
கடந்த ஆகஸ்டு 18-ந்தேதி இந்த அவையில் அந்தப் பிரச்சினையைக் கிளப்பினார்கள்; வெளிநடப்பு செய்தார்கள். வழக்கு முடியும் தருவாயில் இருக்கும்போது எதற்காக மேல் விசாரணை செய்ய வேண்டுமென்று பேட்டியும் கொடுத்தார். என்னைப் போன்றவர்களுக்கே தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பில்லை என்றும் பேட்டியளித்தார்கள். மறுநாள் ஆகஸ்டு 19-ந்தேதி அன்று கவர்னரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மனுவும் கொடுத்திருக்கிறார். நிர்பந்தம் காரணமாக காவல் துறையினர் மேல் விசாரணை நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். முடியும் தருவாயில் உள்ள வழக்கை மீண்டும் எதற்காக விசாரணை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்டார்கள். அதாவது, நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சட்டமன்றத்தில் எழுப்பியது யார்? நாங்களல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி:-கோடநாடு வழக்கு நடக்கிறது. நீதிமன்றத்தில் நடப்பதை பற்றி நான் சொல்லவில்லை. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை போலீசார் விசாரித்தபோது அவர் என் பெயரை குறிப்பிட்டதாக செய்திகள் வந்தது. அந்த செய்தியை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தான் தெரிவித்தேன். வழக்கு சம்பந்தமாக எந்த கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை.

Next Story