நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னர் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளுக்கு கவுன்சிலிங் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னர் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளுக்கு கவுன்சிலிங் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 14 Sep 2021 5:59 AM GMT (Updated: 14 Sep 2021 5:59 AM GMT)

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மன உளைச்சல் ஏற்பட்டால் உடனே 104 எண்ணை அழைத்து பேசவேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இதை மத்திய  அரசு கண்டுகொள்ளாத நிலையில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்தனர். நீட் தேர்வை தமிழில் எழுத 19, 867 பேர் விண்ணப்பித்த நிலையில் அரசுப் பள்ளிகளில் இருந்து 11,236 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து தேர்வை எதிர்கொண்டனர்.

இந்த சூழலில் நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று முன்தினம் மேட்டூரை சேர்ந்த மாணவன் தனுஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த செய்தி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டது . அத்துடன் மாணவர்கள் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம் என முதல்-அமைச்சர்  ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். 

இருப்பினும் இன்று அறியலூரை சேர்ந்த மாணவி கனிமொழி என்பவர் நீட் தேர்வு கடினமாக இருந்ததால் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுவரை நீட் தேர்வுக்கு 5 தமிழக மாணவர்கள்  தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மன உளைச்சல் ஏற்பட்டால் உடனே 104 எண்ணை அழைத்து பேசவேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. 

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை எண்ணம் வந்தால் 104 எண்ணை அழைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தொலைபேசி வாயிலாக  உளவியல் ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெர்வித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கடந்த ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை ஜனாதிபதி  ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியதை சட்டமன்றத்தில் அவர்கள் தெரிவிக்கவில்லை.

ஆட்சிக்கு வந்து முதல் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் என்றுதான் கூறினோம். ஏற்கனவே அனுப்பப்பட்ட மசோதாவுக்கும், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவுக்கும் வேறுபாடு உள்ளது.

நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் தரலாம் என துறை சார்பில் முடிவு செய்துள்ளோம்.

16 பேர் உயிரிழந்த நிலையில் நீட் சட்டமுடிவை நாடகம் எனக்கூறும் பா.ஜ.க.வை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் வரும் 14 ந்தேதி மீண்டும் சிறப்பு மெகா  தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என கூறினார்.

Next Story