சிறப்பாக செயல்பட்ட 134 போலீசாருக்கு அண்ணா பதக்கங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சிறப்பாக செயல்பட்ட 134 போலீசாருக்கு அண்ணா பதக்கங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 8:23 AM GMT (Updated: 14 Sep 2021 8:30 AM GMT)

சிறப்பாக செயல்பட்ட 134 போலீசாருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் இந்த பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் காவல்துறையில் சிறப்பாக செயல்பட்ட 134 போலீசாருக்கு இந்த ஆண்டு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறையில் 100 பேர் தீயணைப்புத்துறையில் 8 பேர், சிறைத்துறையில் 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல்ரேகைப் பிரிவில் 2 பேர், தடய அறிவியல் துறை பிரிவில் இளநிலை அறிவியல் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோருக்கு முதல்-அமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக முதல்-அமைச்சரின் வீரதீர செயலுக்கான தீயணைப்புத்துறை பதக்கம் மற்றும் தலா ரூ.5 இலட்சம் பண வெகுமதி, 14.11.2020 அன்று மதுரையில், நிகழ்ந்த தீ விபத்தில் இருந்து பல மனித உயிர்களையும், சொத்துக்களையும் காப்பாற்றிய நிலையில் கட்டிட இடிபாடுகளுக் கிடையே சிக்கி பலத்த காயங்களுடன் தங்கள் உயிரைத் தியாகம் செய்த தீயணைப்பு வீரர்கள் திரு.கு.சிவராஜன் மற்றும் திரு.பெ.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் உட்பட 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்களுக்கு அவர்கள் ஆற்றிய வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story