4 மாதங்களில் வழங்க இலக்கு: விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்சார இணைப்புகள் - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்


4 மாதங்களில் வழங்க இலக்கு: விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்சார இணைப்புகள் - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
x
தினத்தந்தி 14 Sep 2021 9:40 PM GMT (Updated: 14 Sep 2021 9:40 PM GMT)

விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய விவசாய மின்சார இணைப்புகள் வருகிற 4 மாதங்களுக்குள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய விவசாய மின்சார இணைப்புகள் வழங்குவது குறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி மற்றும் மின்சார பகிர்மானக் கழகத்தின் இயக்குனர் சிவலிங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகளுக்கு மின்சார இணைப்புகள் வழங்கும் முறை குறித்து கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் விவசாய உற்பத்தியை பெருக்குவதுடன், விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் 1 லட்சம் புதிய விவசாய மின்சார இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021-2022 எரிசக்தி துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கான 1 லட்சம் மின்சார இணைப்புகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வழங்கப்படும். இதற்கு 6 மாதங்கள் கால அவகாசம் இருந்தாலும், அடுத்த 4 மாதங்களுக்குள் மின்சார இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார்.

விவசாய மின்சார இணைப்புக்கோரி பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் பதிவு மூப்பு அடிப்படையில் விவசாய விண்ணப்பம் பதிவு செய்துள்ள விவசாயிகள் தங்களது தயார் நிலையை தெரிவிக்க வசதியாக, அவர்களுக்கு மின்சார வாரியம் சார்பில் அறிவிப்புக் கடிதம் அனுப்பப்படும்.

விண்ணப்பதாரர் நிலம், கிணறு உரிமைக்கான ஆவண நகல்களை பிரிவு அலுவலரிடம் காண்பித்து அவர்களது தயார்நிலையை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில், மின்சார வாரியம் மதிப்பீடு தயார் செய்து மின்சார இணைப்பு வேலைகளை முடித்து மின்சார இணைப்பு பெற்றுக் கொள்ள விண்ணப்பதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர் மோட்டார், கெப்பாசிட்டர் உள்ளிட்ட சாதனங்களை வாங்கிப் பொருத்தி மின்இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். மின்கட்டணத்தை தமிழக அரசு, மின்சார வாரியத்துக்கு மானியமாக வழங்கும். இதன் மூலம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட மாதம் தோறும் மின்சார கணக்கீடு எடுக்கும் முறையை செயல்படுத்த அதிகளவு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது மின்சார வாரியத்தில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. எனவே, ஊழியர்கள் படிப்படியாக நியமிக்கப்படுவர்.

வடசென்னை, தூத்துக்குடி அனல்மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி மாயமானது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் பூமிக்கடியில் மின்சார கேபிள்கள் பதிக்கும் பணி அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும். பதவி உயர்வு படிப்படியாக வழங்கப்படுகிறது. இதில் பிரச்சினைகள் இருந்தால் நேரடியாக என்னையோ, மேலாண்மை இயக்குனரையோ தொடர்பு கொள்ளலாம். அது அவர்களுடைய உரிமையாகும். உப்பூர், உடன்குடி அனல் மின்நிலையங்கள் குறித்து அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து மறு ஆய்வு செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story