போர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து மறைமலைநகரில் இயங்க நடவடிக்கை - மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


போர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து மறைமலைநகரில் இயங்க நடவடிக்கை - மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Sep 2021 10:14 PM GMT (Updated: 14 Sep 2021 10:14 PM GMT)

போர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து மறைமலை நகரில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை, 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், நிலைத்த வேலை வாய்ப்புகளை அளிப்பதிலும், தொழில் முனைவோர் மேம்பாடு அடைவதிலும் நாற்றங்காலாக விளங்குவது தொழில் துறை மற்றும் அதன் தொடர்புடைய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்தத் துறைகளை ஊக்குவிக்கவும், தொழில் அமைதியை உருவாக்கவும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்.

தொழில்கள் வளர்ந்தால்தான் தொழிலாளர்கள் வாழ முடியும் என்பதை அடிப்படையாக கொண்டு புதிது புதிதாக தமிழ்நாட்டில் தொழில்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான போர்டு நிறுவனம், விற்பனை பாதிப்பு மற்றும் தொடர் இழப்பு காரணமாக சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையை அடுத்த ஆண்டு 2-ம் காலாண்டில் மூடுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பேரிடியை அளிப்பதாக அமைந்துள்ளது என்றும்,

கடந்த ஒரு வாரமாக உற்பத்தி நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், மூலப் பொருட்கள் பற்றாக்குறை என்று கூறப்பட்டாலும், நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்கான தந்திரம்தான் இது என்றும், எப்பொழுது உற்பத்தி தொடங்கப்படும், எப்பொழுது தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றும் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட ஊதிய உடன்படிக்கை ஓராண்டுக்கு மேற்கொள்ளப்பட்ட போதே சந்தேகம் அடைந்து, இது குறித்த கேள்வியை எழுப்பியதாக சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் பத்திரிகைக்கு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர், தொழிற்சாலையை மூடுவது என்பது கடினமான முடிவுதான். எங்களுக்கு இதைத்தவிர வேறு முடிவு தெரியவில்லை. பல்வேறு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டும், உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வாகனங்களால் நீண்ட காலத்திற்கு லாபம் ஈட்டும் பாதையை தங்களால் அடைய முடியவில்லை என்று தெரிவித்து இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்து உள்ளது.

போர்டு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காரணமாக சுமார் 4 ஆயிரம் நேரடித் தொழிலாளர்களின் எதிர்காலமும், கிட்டத்தட்ட 40 ஆயிரம் மறைமுகத் தொழிலாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

இது மட்டுமல்லாமல், போர்டு மோட்டார் நிறுவனத்திற்கு மூலப் பொருட்களை விநியோகித்து வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், கிட்டத்தட்ட 4 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் மூடும் அபாயம் உள்ளதாகவும், பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு.

எனவே, நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படையக் கூடிய இந்தப் பிரச்சினையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி, போர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள மறைமலைநகரில் இயங்கவும், தொழிலாளர்கள் தொடர்ந்து அங்கு பணிபுரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story