அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 15 Sep 2021 7:14 AM GMT (Updated: 15 Sep 2021 7:14 AM GMT)

அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது.அ.தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.



சென்னை :

அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் கூட்டணியில் இருந்து விலகியதால் பாதிப்பு பா.ம.கவுக்கு தான்.பா.ம.க. முடிவெடுக்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அ.தி.மு.க.வை விமர்சிக்க உரிமையில்லை. 

அ.தி.மு.க.வை ராமதாஸ் விமர்சிப்பதை ஏற்க முடியாது. அ.தி.மு.க.வை பா.ம.க. விமர்சித்தால் நாங்களும் விமர்சிக்க நேரிடும்.

அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது.அ.தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.  பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு செய்துள்ளதால், எங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் கைகொடுக்கும் என நம்பிக்கை உள்ளது.மக்கள் எங்களுடன் இருக்கும் வரை எந்த இழப்பும் கிடையாது.

நாட்டு மக்களுக்கு அ.தி.மு.க. பல நன்மைகள் செய்துள்ளது. தி.மு.க. பொறுத்தவரை நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை முழுமையாக மொட்டை அடித்துவிட்டார்கள். இதன் தாக்கம் தி.மு.க.வுக்கு எதிராக உள்ளாட்சி தேர்தலில் இருக்கும்.

அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் எந்த பாதிப்பும் இல்லை. தனித்துப் போட்டியிடுவது என்பது பா.ம.க.வின் தனிப்பட்ட முடிவு.யாருடைய கட்டாயத்தின் பேரில் தனித்துப் போட்டி என முடிவெடுத்தார்கள் என்பது தெரியவில்லை.

அம்மாவின் மறைவிற்கு பிறகு பல விமர்சனங்களை கடந்து தற்போது வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம். தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் குறைந்த வாக்குகள் தான் வித்தியாசம். மாபெரும் வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளோம். அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதத்தில் எந்த பாதிப்பு கிடையாது.

சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவிற்கு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் போலீசார் ஒருவர்  தலையை தேடி கொண்டியிருக்கிறார்கள் . மதுரையில் மாற்றுத்திறனாளி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.ராமநாதபுரத்தில் பெட்ரோல் பங்கில் கொள்ளை நடந்துள்ளது  என கூறினார்.

Next Story