தொழிலாளி கொலைக்கு பழிக்குப்பழி நெல்லையில் மேலும் ஒருவர் தலை துண்டித்து கொலை


தொழிலாளி கொலைக்கு பழிக்குப்பழி நெல்லையில் மேலும் ஒருவர் தலை துண்டித்து கொலை
x
தினத்தந்தி 15 Sep 2021 8:56 PM GMT (Updated: 15 Sep 2021 8:56 PM GMT)

நெல்லையில் தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், பழிக்குப்பழியாக மேலும் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

நெல்லை,

நெல்லை அருகே கீழசெவல் நயினார்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சங்கர சுப்பிரமணியன் (வயது 38). தொழிலாளியான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடுவூர்பட்டி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே காட்டுப்பகுதியில் மர்ம கும்பலால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அந்த கும்பல் சங்கரசுப்பிரமணியனின் தலையை கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ள மந்திரம் என்பவரது கல்லறையில் வைத்துவிட்டு சென்று விட்டனர்.

பழிக்குப்பழியாக....

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பழிக்குப்பழியாக தலையை துண்டித்து மேலும் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

நெல்லை அருகே கோபாலசமுத்திரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (37) என்பவர் அருகில் உள்ள பிராஞ்சேரி செங்குளம் காலனி குளத்துக்கரை பகுதியில் நேற்று காலை தலை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

விவசாயியான மாரியப்பன் நேற்று அதிகாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் செங்குளம் காலனி குளத்துக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் வழிமறித்து அவரது இடது காலை அரிவாளால் வெட்டித்துண்டித்து உள்ளனர். பின்னர் அவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்து உள்ளனர். உடலை அங்கேயே போட்டு விட்டு தலையை எடுத்து சென்று விட்டனர். மாரியப்பனின் தலையை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

தனிப்படைகள்

அப்போது அவரது தலை சங்கரசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் கைப்பற்றினர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கொலை செய்யப்பட்ட மாரியப்பன் கடந்த 2014-ம் ஆண்டு கோபாலசமுத்திரம் வடக்கூரை சேர்ந்த கணேசன் என்ற கார்த்திக் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், மாரியப்பனின் தலையை மர்மநபர்கள் சங்கர சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட இடத்தில் வீசி சென்று இருப்பதால் அவரது கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மாரியப்பன் கொலையில் துப்பு துலக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story