தமிழகத்தில் 1,658 பேருக்கு கொரோனா 14 மாவட்டங்களில் 29 பேர் உயிரிழப்பு


தமிழகத்தில் 1,658 பேருக்கு கொரோனா 14 மாவட்டங்களில் 29 பேர் உயிரிழப்பு
x

தமிழகத்தில் நேற்று 1,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 14 மாவட்டங்களில் 29 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 226 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 959 ஆண்கள், 699 பெண்கள் என மொத்தம் 1,658 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 226 பேரும், கோவையில் 224 பேரும், ஈரோட்டில் 130 பேரும், செங்கல்பட்டில் 126 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 5 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 85 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 282 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

29 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 222 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 15 லட்சத்து 40 ஆயிரத்து 458 ஆண்களும், 10 லட்சத்து 98 ஆயிரத்து 172 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 26 லட்சத்து 38 ஆயிரத்து 668 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 98 ஆயிரத்து 240 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 80 ஆயிரத்து 650 முதியவர்களும் இடம்பெற்று உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 23 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 6 பேரும் என 29 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 5 பேரும், கோவையில் 4 பேரும், நாகப்பட்டினம், காஞ்சீபுரத்தில் தலா 3 பேரும் உள்பட 14 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 24 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 35 ஆயிரத்து 246 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

1,542 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் நேற்று 40 ஆயிரத்து 985 ஆக்சிஜன் படுக்கைகள், 24 ஆயிரத்து 146 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 8 ஆயிரத்து 184 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 73 ஆயிரத்து 315 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து 1,542 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 174 பேரும், கோவையில் 197 பேரும், ஈரோட்டில் 107 பேரும் அடங்குவர். இதுவரையில் 25 லட்சத்து 86 ஆயிரத்து 786 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 16 ஆயிரத்து 636 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story