மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் இறுதி விசாரணை


மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் இறுதி விசாரணை
x

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் இறுதி விசாரணையை அறிவித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்ய கோரி தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன. அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி சங்கம் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

நீதிபதிகள் அறிக்கை

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்த ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் பொன்.கலையரசன், டி.முருகேசன் ஆகியோர் அளித்த அறிக்கைகளையும், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த அறிக்கையையும் படித்துப் பார்த்து, அதன் பின்னர் வாதிட வேண்டியுள்ளதால், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

நெருக்கடி நிலை

மேலும், ‘‘இந்த சட்டத்தின் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது அரசு பள்ளி மாணவர்கள் நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளனர். நீட் தேர்வு நடைபெற்றுள்ள நிலையில் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவங்கள் நடந்துள்ளன’’ என்றும் அட்வகேட் ஜெனரல் கூறினார்.

இறுதி விசாரணை

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகி, கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என்றனர். அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் இறுதி விசாரணையை வருகிற அக்டோபர் 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story