பா.ஜனதா பிரமுகர் ஓட, ஓட வெட்டிக்கொலை


பா.ஜனதா பிரமுகர் ஓட, ஓட வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 16 Sep 2021 9:00 PM GMT (Updated: 16 Sep 2021 9:00 PM GMT)

சிவகங்கையில் ஓட, ஓட விரட்டி பா.ஜனதா பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து பா.ஜனதா கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கையில் நெல்மணி தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 43). இவருடைய மனைவி ஸ்வேதா (37). இவர்களுக்கு மாலினி (17) கவுசிகா (13) ஆகிய 2 மகள்களும் கோகுல் (15) என்ற மகனும் உள்ளனர். முத்துப்பாண்டி சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. மீனவர் அணி மாவட்ட துணைத்தலைவராக இருந்தார்.

நேற்று மாலை 5.30 மணி அளவில் முத்துப்பாண்டி வீட்டு அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் முத்துப்பாண்டியை வாளால் சரமாரியாக வெட்டினர்.

ஓட, ஓட விரட்டி கொலை

அவர்களிடம் இருந்து தப்பிக்க முத்துப்பாண்டி அங்கிருந்து ஓடினார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரை விடாமல் ஓட, ஓட விரட்டிச்சென்று வெட்டினார்கள். பின்னர் அவர்கள் தப்பிவிட்டனர்.

சிவகங்கை நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

உடனடியாக அந்தப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துப்பாண்டியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் குவிப்பு

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பா.ஜனதா கட்சியினர் ஏராளமானவர்கள் ஆஸ்பத்திரியில் கூடினார்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிக்கிய மோட்டார் சைக்கிள்

போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2016-ம் ஆண்டு சிவகங்கையை அடுத்த சாமியார்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற செல்வம் என்பவரது கொலைக்கு பழிக்குப்பழியாக தற்போது முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Next Story