கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்


கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்
x
தினத்தந்தி 16 Sep 2021 9:17 PM GMT (Updated: 16 Sep 2021 9:17 PM GMT)

கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

கொரோனா தொற்றினால் பலியானவர்களுக்கு, கொரோனாவால் பலியானார் என்று சான்றிதழ் வழங்கப்படாததால், அவர்களின் குடும்பத்தினரால் உரிய நிவாரண உதவிகளை பெற இயலவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு விதிகள் வகுத்துள்ளது. அந்த விதிகளின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் கலெக்டர், மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டிருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

மாவட்ட குழுக்கள் ஆகஸ்ட் 31-ந்தேதிக்கு முந்தைய மரணங்கள் குறித்து ஆய்வு செய்து, அக்டோபர் 31-ந்தேதிக்குள் இறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஏற்கனவே வழங்கிய சான்றிதழ்களில் கொரோனா மரணம் என குறிப்பிடாமல் இருந்து, ஆய்வில் கொரோனாவால் மரணம் அடைந்தவர் என தெரியவந்தால், ஒரு மாதத்திற்குள் கூடுதல் சான்றிதழ் வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story