திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி 3 கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி 3 கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Sep 2021 12:03 AM GMT (Updated: 17 Sep 2021 12:03 AM GMT)

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

நாள் முழுவதும் அன்னதானம்

அதன்படி திருச்செந்தூர் முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியசாமி கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அந்த 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

இறையருள் பெற கோவில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதான திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில் 754 கோவில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய காலகட்டங்களிலும் கோவில்கள் மூலம் ஏழைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. இதனை பின்பற்றி கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக கோவில்கள் சார்பாக 44 லட்சம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

திருச்செந்தூர் முருகன் கோவில்

கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்று அனைத்து முதுநிலை கோவில்களிலும் பெறப்பட்டுள்ளது. தற்போது, பழனி - தண்டாயுதபாணி கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி கோவில் ஆகிய இரண்டு கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு, கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் 4.9.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் திருச்செந்தூர் முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியசாமி கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்றஅறிவிப்பு வெளியிடப்பட்டது.

இரவு வரை உணவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தின் வாயிலாக இந்த 3 கோவில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதானத் திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாலை முரசு நிர்வாக இயக்குனரும், திருச்செந்தூர் முருகன் கோவில் தக்காருமான இரா.கண்ணன் ஆதித்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர்கள் சு. சிவராசு(திருச்சி), கே. செந்தில்ராஜ் (தூத்துக்குடி), ஆல்பி ஜான் வர்கீஸ் (திருவள்ளூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story