திறமையான ஐ.டி. துறையினர் அதிகம் உள்ளனர்: தொழில் வளர்ச்சியை தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது


திறமையான ஐ.டி. துறையினர் அதிகம் உள்ளனர்: தொழில் வளர்ச்சியை தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது
x
தினத்தந்தி 17 Sep 2021 9:06 PM GMT (Updated: 17 Sep 2021 9:06 PM GMT)

தமிழகத்தில் திறமையான ஐ.டி. துறையினர் அதிகம் உள்ளனர் என்றும் தொழில் வளர்ச்சியைத் தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

பான் ஐ.ஐ.டி.-ன் உலகளாவிய இரண்டு நாள் பைவாட் என்ற தொழில்நுட்ப மாநாடு தொடக்க விழாவில் காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

ஐ.ஐ.டி. நிறுவனங்கள் நமது வளர்ச்சியில் பெருமைப்படத்தக்க வகையில் பங்காற்றியுள்ளன. அதிலும் சென்னை ஐ.ஐ.டி, தமிழ்நாடு அரசு பல்வேறு முனைகளில் இருந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசுக்கு உறுதுணையாய் இருந்துள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் மையமாக, தமிழ்நாடு உருவாவதற்கான பயணம் தொடங்கும் இவ்வேளையில், நமது பயணத்தின் இலக்கை அடைய உதவுவதில் பான் ஐ.ஐ.டி. நெட்வொர்க் முக்கியப் பங்காற்ற வேண்டும்.

பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் கவனம் செலுத்தி, அதன்மூலம் ஒரு ட்ரிலியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டிலேயே 2-வது இடம் வகிப்பதுடன், தொழில் வளர்ச்சி மிக்க மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழ்நாடு உள்ளது. ஐ.டி. துறையைப் பொறுத்தவரையில், இந்தியாவில் இருந்து அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களுள் ஒன்று தமிழகம். அதாவது, நாட்டின் மொத்த ஐ.டி.துறை சார்ந்த ஏற்றுமதிகளில் 10 சதவீதம் தமிழ்நாட்டினுடையதாகும்.

புதுமைக்கு சிறந்த களம்

கடலடி கேபிள்கள் தமிழ்நாட்டில் வரப்போவதால் தகவல் தரவு மையங்கள் வருவதாலும், காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தியில் இருந்து பெறப்படும் பசுமை மின் திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக மின்மிகை மாநிலமாகத் தமிழ்நாடு மாற உள்ளதாலும், பல்வேறு நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு ஏற்ற இடமாக இருக்கும்.

தொழில்நுட்பக் கல்வி முடித்த பட்டதாரிகளும் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதால் இந்நிறுவனங்களுக்குத் தேவையான திறன்மிகு பணியாளர்களும் எளிதில் கிடைப்பார்கள். இத்தகைய வளமும் வாய்ப்பும், முதலீட்டாளர்களுக்கான சிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டைத் தகுதிப்படுத்தியுள்ளது.

ஆட்டோமொபைல், மருந்துப்பொருட்கள், மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள், காற்றாலைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட உற்பத்திப் பிரிவுகளைத் தமிழ்நாடு கொண்டுள்ளது. மின்னணுப் பொருட்களைத் தயாரிப்பதில் இந்தியாவிலேயே 2-ம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. புதுமையான சிந்தனையுடன் களமிறங்கும் தொழில்முனைவோர்களுக்கு ஏற்ற சிறந்த களமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.

தொழில் வளர்ச்சி மாநிலம்

ஐ.டி. துறையினர் திறமையானவர்களைக் கண்டறிவதற்கு ஏதுவாக, தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அதிகமான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ள மாநிலமும் தமிழ்நாடுதான். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை மற்றும் ஓசூரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எல்காட் நிறுவியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையம் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 35 நிறுவனங்களுடன் 17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது. இதனால் 55 ஆயிரம்புதிய வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாகும். தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காகப் புதிய கொள்கைகளை வகுத்து வருவதோடு, ஒற்றைச் சாளர முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது.

புதிய புதிய முயற்சிகளை முன்னெடுக்கவும் ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது. எனவே, தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாகவும் வளர்ச்சியைத் தரும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கும் என்பதை முதலீட்டாளர்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் தொழில் நிறுவனத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story