நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழகம்-கேரளா இடையே 3-வது கட்ட பேச்சுவார்த்தை


நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழகம்-கேரளா இடையே 3-வது கட்ட பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 17 Sep 2021 9:14 PM GMT (Updated: 17 Sep 2021 9:14 PM GMT)

நதிநீர் பிரச்சினை தொடர் பாக தமிழகம்-கேரளா இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.

சென்னை,

தமிழ்நாடு-கேரள மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வுகாணும் வகையில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவும், பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு குழுவும் அமைப்பது என்று 2 மாநில அரசுகளும் முடிவுசெய்து குழுக்கள் அமைக்கப்பட்டன.

இரண்டு மாநில குழுக்களின் முதல் கூட்டம் சென்னையில் 12.12.2019 அன்றும், 2-வது கூட்டம் திருவனந்தபுரத்தில் 11.9.2020 அன்றும் நடைபெற்றன.

அந்தவகையில், இந்த குழுக்களின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. தமிழக பொதுப்பணித்துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையிலான தமிழ்நாட்டு குழுவும், கேரள அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டி.கே.ஜோஸ் தலைமையிலான கேரள மாநில குழுவும் கலந்துகொண்டு பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

முல்லைப் பெரியார் அணை

கூட்டத்தில், ஆனைமலையாறு திட்டம், நீராறு-நல்லாறு இணைப்புத்திட்டம், பாண்டியாறு-புன்னம்புழா திட்டங்கள் குறித்தும், பேபி அணை மற்றும் முல்லைப் பெரியார் அணையில் உள்ள 23 மரங்களை அகற்றுவதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி, வல்லக்கடவு முதல் முல்லைப் பெரியார் அணை வரை செல்லும் இணைப்புச் சாலையை மேம்படுத்துதல், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவிலுள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் நெய்யாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுதல், பெரியார் அணையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக படகுகள் விடுவது குறித்தும் தமிழ்நாடு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இப்பொருள் குறித்து இரு மாநில அலுவலர்கள் குழு ஆலோசனை மேற்கொண்டது.

ஆலோசனை

கேரள மாநிலம் சார்பில் முல்லைப் பெரியார் அணையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான வாடகை மற்றும் ‘ராயல்டி’ கட்டணங்கள் குறித்த ஒப்பந்தத்தை புதுப்பித்தல், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தை புதுப்பித்தல் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. அது குறித்து இரு மாநில அலுவலர்கள் குழு இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன், நீர்வளத்துறை முதன்மை தலைமைப்பொறியாளர், கே.ராமமூர்த்தி, நீர்வளத்துறை மதுரை மண்டல தலைமைப்பொறியாளர் எம்.கிருஷ்ணன், தலைமைப்பொறியாளர் (திட்டங்கள் வடிவமைப்பு) சி. பொன்ராஜ், கோவை மண்டல தலைமைப்பொறியாளர் கே.அசோகன், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பி.முத்துச்சாமி, அத்திக்கடவு-அவினாசி திட்ட கோட்ட கண்காணிப்பு பொறியாளர் எஸ்.சிவலிங்கம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்காணிப்பு பொறியாளர் சங்கர்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story