வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும் பொட்டலம் அன்னதான திட்டத்தில் மாற்றம் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு


வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும் பொட்டலம் அன்னதான திட்டத்தில் மாற்றம் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Sep 2021 7:08 PM GMT (Updated: 19 Sep 2021 7:08 PM GMT)

வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும் பொட்டலம் அன்னதான திட்டத்தில் மாற்றம் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.

சென்னை,

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 754 கோவில்களில் தரிசனத்துக்கு வருகைதரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

கடந்த 16-ந்தேதி, திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இத்திட்டம் பக்தர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் பந்தியில் இலையில் பரிமாறப்படாமல் உணவுப்பொட்டலங்களாக அனைத்து நாட்களிலும் (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்பட) வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை இன்று (திங்கட்கிழமை) முதல் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அன்னதானம் வழங்கும் கோவில்களிலும் அன்னதானக் கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு அன்னதானம் பந்தியில் இலையில் பரிமாறப்படும்.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம் உணவுப் பொட்டலங்களாக பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story