சென்னையில் தினசரி குடிநீர் வினியோகம் 975 மில்லியன் லிட்டராக அதிகரிப்பு


சென்னையில் தினசரி குடிநீர் வினியோகம் 975 மில்லியன் லிட்டராக அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 Sep 2021 7:56 PM GMT (Updated: 19 Sep 2021 7:56 PM GMT)

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு உள்ளதால் சென்னைக்கு தினசரி வழங்கப்படும் குடிநீரின் அளவு 975 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி (13.22 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது இந்த ஏரிகளில் 10 ஆயிரத்து 477 மில்லியன் கன அடி (10.47 டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 79.24 சதவீதமாகும்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 110 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையில் இருந்து 247 கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

குடிநீர் வினியோகம் அதிகரிப்பு

இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி. தற்போது 2 ஆயிரத்து 639 மில்லியன் கனஅடி, அதாவது 81 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வழக்கத்தைவிட கூடுதலாக நீர் இருப்பு உள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் 4 ஆயிரத்து 964 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 2 மடங்காக 10 ஆயிரத்து 477 மில்லியன் கன அடி (10.47 டி.எம்.சி.) தண்ணீர் இருக்கிறது. இதையடுத்து சென்னையில் தினசரி குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

975 மில்லியன் லிட்டர்

இந்த ஆண்டு தொடக்கத்தில் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு உள்ளதால் பொதுமக்களுக்கு கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி குழாய்கள் மூலம் 897.26 மில்லியன் லிட்டரும், லாரிகள் மூலம் 32.70, தொழிற்சாலைகளுக்கு 21.66, நகராட்சிகளுக்கு மொத்தமாக 23.76 உள்பட மொத்தம் 975.38 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் வினியோகிக்கப்பட்ட குடிநீர் அளவில் இது அதிகபட்சம் ஆகும். ஏரிகளில் நீர் இருப்பு அதிகமாக இருப்பதால் தினசரி தண்ணீர் வினியோகம் படிப்படியாக 1000 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்படும்.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story