தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வராது அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி


தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வராது அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி
x
தினத்தந்தி 19 Sep 2021 9:01 PM GMT (Updated: 19 Sep 2021 9:01 PM GMT)

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வராது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தில் 2-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் ‘20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி‘ என்ற இலக்குடன் தொடங்கியது. கடந்த வாரம் 40 ஆயிரம் மையங்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி என்ற நோக்கத்தில் முகாம் நடத்தப்பட்டதில், 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்றைய நிலையில் 16 லட்சம் தடுப்பூசி மட்டுமே கையிருப்பு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வராது. வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டத்தில் மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 19 ஆக்சிஜன் உற்பத்தி முனையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. எனவே ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நிலை இல்லாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் நேற்று (நேற்று முன்தினம்) இரவு வரை 4 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரத்து 900 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளன. கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை முதலிடம்

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட சதவீத அடிப்படையில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கேரளாவில் இருந்து வருபவர்களில் கொரோனா நெகட்டிவ் சான்று மற்றும் இரு தவணை தடுப்பூசி செலுத்திய சான்று உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். கேரளாவில் ஜிகா, நிபா வைரஸ் தொற்றுகள் பரவிய நிலையில் தமிழக-கேரள எல்லையோரத்தில் உள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story