ஜி.எஸ்.டி. வரியின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள்: தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை தி.மு.க. நிலைநிறுத்த வேண்டும்


ஜி.எஸ்.டி. வரியின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள்: தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை தி.மு.க. நிலைநிறுத்த வேண்டும்
x
தினத்தந்தி 19 Sep 2021 10:43 PM GMT (Updated: 19 Sep 2021 10:43 PM GMT)

பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரியின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்து தி.மு.க.வின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மாநில சுயாட்சி, ‘நீட்’ தேர்வு ரத்து, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சினை என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு என்பது தி.மு.க.வுக்கு கைவந்த கலை.

அந்த வகையில், தற்போது பெட்ரோலியப் பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது.

ஜி.எஸ்.டி. வரி வரம்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்றால், அவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் வரம்பிற்குக் கீழ் கொண்டுவர வேண்டும் அல்லது அதற்கான ஆயத்தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தச் செய்தி 25-1-2018 அன்று அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 4-4-2018 அன்று தனது டுவிட்டர் பக்கத்தில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி) வரம்பின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியவர் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

தி.மு.க.வின் நிலைப்பாடு

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பெட்ரோலியப் பொருட்களை, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின்கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலுக்கு முந்தைய தி.மு.க.வின் நிலைப்பாடு.

இந்த நிலைப்பாடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு மாறிவிட்டது. லக்னோவில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்கான 45-வது கவுன்சில் கூட்டத்தில், கேரள ஐகோர்ட்டு உத்தரவின்படி, பெட்ரோல் மற்றும் டீசலை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்த தீர்மானம் பரிசீலிக்கப்பட்டு, அதனை பல்வேறு மாநிலங்கள் ஏற்க மறுத்ததால், அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

இந்தக் கூட்டத்தில், தி.மு.க. சார்பில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளாவிட்டாலும், அவர் மத்திய நிதி மந்திரிக்கு எழுதிய கடிதத்தில், “மாநிலங்களின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரி விதிப்பு மட்டுமே தற்போது உள்ளது என்றும், இதையும் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும் என்றும், அதனால் இதுபோன்ற சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை” என்றும் தெரிவித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

அதாவது, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வருவதை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கு பிந்தைய தி.மு.க.வின் நிலைப்பாடு.

மக்கள் மனதில் ஐயப்பாடு

இதன் விளைவாக, முதல்-அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடவேண்டும் என்பதற்காகத்தான் என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் சுமையை குறைக்கும் வண்ணம், பெட்ரோலியப் பொருட்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்து தி.மு.க.வின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற நடவடிக்கை, பொதுமக்களின் சுமையை குறைப்பதோடு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு என்ற தி.மு.க.வின் வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story