விஜய் மக்கள் இயக்க கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்


விஜய் மக்கள் இயக்க கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Sep 2021 10:54 PM GMT (Updated: 19 Sep 2021 10:54 PM GMT)

விஜய் மக்கள் இயக்க கட்சி கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு வருகிற 27-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு அவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார்.

இதன்பின்னர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்ய அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செய லாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

தடை கோரி வழக்கு

இதையடுத்து, நடிகர் விஜய் தனது தந்தை தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார்.

இந்தநிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தார்.

27-ந் தேதி மீண்டும் விசாரணை

இந்த வழக்கு கடந்த மாதம் 23-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது.

எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா ஆகியோர் தரப்பில் வக்கீல் ஆஜராகினர். விஜய் தரப்பில் வக்கீல் ஆஜராகவில்லை.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story