‘நீட்’ தேர்வு பாதிப்பை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழு அறிக்கை வெளியீடு


‘நீட்’ தேர்வு பாதிப்பை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழு அறிக்கை வெளியீடு
x
தினத்தந்தி 20 Sep 2021 7:07 PM GMT (Updated: 20 Sep 2021 7:07 PM GMT)

‘நீட்‘ தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் மருத்துவத்துறையில் தமிழகம் பின்தங்கி விடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை,

இந்தியா முழுவதும் மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் ‘நீட்‘ என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த தேர்வுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

‘நீட்‘ தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தினால் தமிழகத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? என்பதை ஆய்வு செய்து தமிழக அரசிற்கு பரிந்துரைப்பதற்காக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழுவை தமிழக அரசு நியமித்தது.

என்ன காரணம்?

இந்த குழு பல ஆவணங்கள் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு கடந்த ஜூன் மாதம் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் ‘நீட்‘ தேர்வை எதிர்த்து சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வந்தது.

அதுதொடர்பான சட்டமசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். ‘நீட்‘ தேர்வு தமிழகத்திற்கு ஏன் தேவையில்லை? என்பதற்கான காரணம், நீதிபதி ஏ.கே.ராஜன் கொடுத்த அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டு இருந்தது.

அறிக்கை வெளியீடு

அந்த சட்டமசோதா, சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னரின் ஒப்புதலைப்பெற அனுப்பப்பட்டுள்ளது. கவர்னரின் ஒப்புதலையோ அல்லது தேவைப்பட்டால் ஜனாதிபதியின் ஒப்புதலையோ பெற்றால் மட்டுமே அந்த சட்டமசோதா சட்டமாக மாற்றப்படும்.

இந்த நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட குழு அளித்த 165 பக்கங்களை கொண்ட அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதன் முடிவுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மோசமான பாதிப்பு

தமிழகத்தில் ‘நீட்‘ தேர்வு மேலும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் இங்குள்ள சுகாதார பாதுகாப்பு முறைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுவிடும். பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்படுவதற்கு போதுமான டாக்டர்கள் இருக்கமாட்டார்கள்.

அரசு ஆஸ்பத்திரிகளில் நியமிக்கப்படுவதற்கு போதுமான அளவில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் இருக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும். ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கு மருத்துவக்கல்வியில் சேர வாய்ப்பு இல்லாமலேயே ஆகிவிடும்.

சுதந்திரத்திற்கு முன்பு

மொத்தத்தில், சுதந்திரத்திற்கு முன்பு தேவைப்பட்ட சிறு நகரங்கள், கிராமங்களுக்கு டாக்டர்கள் நடந்து சென்று மருத்துவம் பார்த்தது போன்ற நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டுவிடும். அதோடு, மருத்துவம் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் மிகவும் பின்தங்கிவிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story