கடலூரில் பா.ம.க. நிர்வாகி மர்மசாவு: வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்


கடலூரில் பா.ம.க. நிர்வாகி மர்மசாவு: வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 20 Sep 2021 11:01 PM GMT (Updated: 20 Sep 2021 11:01 PM GMT)

கடலூரில் பா.ம.க. நிர்வாகி மர்மசாவு: வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் செயல்பட்டு வரும், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தாமல் எதிரிகளை தப்பிக்க வைக்க செய்யப்படும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை.

உயிரிழந்த கோவிந்தராசுவின் வாயில் நஞ்சை ஊற்றி அவர் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பரப்பப்படுகிறது. கொல்லப்பட்ட கோவிந்தராசு பா.ம.க. நிர்வாகி. அவரது படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை பா.ம.க. ஓயாது. கோவிந்தராசு கொலை தொடர்பாக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில், டி.வி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். கோவிந்தராசு குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், மிகக்கடுமையான போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story