என்ஜினீயரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


என்ஜினீயரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Sep 2021 11:49 PM GMT (Updated: 20 Sep 2021 11:49 PM GMT)

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி என்ஜி னீயரிங் உள்ளிட்ட தொழில் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.

அதன்படி இப்பிரிவினருக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின்

என்ஜினீயரிங் படிப்பிற்கு 7.5 சதவீதம் சிறப்பு உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வரவேற்றார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 50 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கி பேசியதாவது:-

மாணவர்களின் கனவு

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழில் கல்வியில் சேர்வதற்காக 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கி உள்ளது. அந்த அடிப்படையில் தொழில் கல்வி படிப்புகளில் சேர்வதற்கான ஆணைகளை பெறுவதற்காக இங்கு வந்திருக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்ஜினீயரிங் பட்டதாரியாக ஆக வேண்டும் என்ற உங்களது கனவு நிறைவேறும் நாள் இது. உங்கள் கனவு நிறைவேறுவதன் மூலமாக உங்களது பெற்றோரது கனவும், உங்களது குடும்பத்து கனவும் நிறைவேறக்கூடிய நாளாக இது அமைந்திருக்கிறது.

திராவிட இயக்கத்தின் நோக்கமே அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் அவர் தகுதிக்கேற்ற வேலை தரப்பட வேண்டும் என்பது தான். தமிழகத்தின் இளைய சக்தி அனைத்தும் உயர் கல்வியை அடைந்ததாக மாற்றுவது தான் இந்த அரசின் உயரிய இலக்காகும். தற்போது நீட் தேர்வுக்கு எதிராக இந்த அரசும் சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. சமூகநீதி உத்தரவுகளால் தான் சமநிலைச் சமுதாயம் அமைப்பதற்கான அடித்தளம் இடப்படுகிறது.

10 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள்

தொழில் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், 7.5 சதவீத இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய இந்த அரசால் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்பட்டது. அந்த அடிப்படையில் தான் நீங்கள் கல்விச் சாலைகளுக்குள் நுழைகிறீர்கள். நடப்பு கல்வி ஆண்டில், இந்த சிறப்பு உள்ஒதுக் கீட்டு மூலம் என்ஜினீயரிங் படிப்புகளில் சுமார் 10 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். அதேபோல, அரசு பள்ளிகளில் பயின்ற சுமார் 350 மாணவர்கள் வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் சட்டப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறுவார்கள். உங்களுக்கு கல்வி ஆணை வழங்குவதை நான் எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

இன்னும் சில ஆண்டுகள் கழித்து, எங்கோ ஒரு ஊரில் என்னைச் சந்தித்து, நீங்கள் கொடுத்த அரசாணையால் கல்வி பெற்ற நான், மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன், சொந்தமாக தொழில் செய்கிறேன் என்று நீங்கள் சொல்வீர்களானால் அதை விட எனக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது.

கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும்

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தொழில் படிப்புகளுக் கான கல்லூரியில் சேரக்கூடிய மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் மனம் மகிழக்கூடிய வகையில் ஒரு செய்தியை, ஒரு அறிவிப்பை மகிழ்ச்சியோடு நான் வெளியிட காத்திருக்கிறேன்.

அது என்னவென்றால், அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக் காக ஆகக்கூடிய செலவு கல்வி கட்டணம், விடுதி கட்டணம், ஏன் கலந்தாய்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அரசுக்கு நன்றி தெரிவித்து மாணவி கவிதை

சேர்க்கை ஆணையை பெற்ற ஈரோடு மாவட்டம் தாசப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த ஹேமவர்ஷினி என்ற மாணவி, முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கவிதை வாசித்தார். நிகழ்ச்சியில்,தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., முதல் அமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தொழில்நுட்ப கல்வித்துறை இயக்குனர் க.லெட்சுமி பிரியா, பல்கலைக் கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உள்பட பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

ரூ.250 கோடி செலவு

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி தமிழகம் முழுவதும் தொழில் கல்வியில் 12 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என்ற வகையில் அரசுக்கு ரூ.250 கோடி செலவாகும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story