தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
"வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, இன்று வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்களை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் தெளிவாகக் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 16 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 11 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் 10 செ.மீ., குறைந்தபட்சமாக காரைக்கால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story