நடைபாதையில் கிரானைட் கற்கள் பதிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


நடைபாதையில் கிரானைட் கற்கள் பதிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Sep 2021 7:13 PM GMT (Updated: 21 Sep 2021 7:13 PM GMT)

நடைபாதையில் கிரானைட் கற்கள் பதிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

சாலைகளின் இருமருங்கிலும் இடத்துக்கு தகுந்தாற்போல் பாதசாரிகளின் அளவிற்கு பொருத்தமான அகலம் கொண்ட நடைபாதைகள் அமைப்பதும், அந்த நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக்கொள்வதும், அவ்வாறு அமைக்கப்படும் நடைபாதைகள் பாதசாரிகள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா? என்பதை கண்காணிப்பதும் மாநில அரசின் கடமை.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், பயண நேரம் மற்றும் இயக்க செலவினை குறைக்கும் வண்ணமும், புதிய பாலங்கள் அமைத்தல், வட்டச்சாலைகள் அமைத்தல், புறவழிச்சாலைகள் அமைத்தல் உள்பட பல்வேறு சாலைப்பணிகளை செய்யும் அரசு, நடைபாதை அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றாலும், அதில் பாதசாரிகளுக்கு சில சிரமங்கள் இருக்கின்றன.

சறுக்கும் தன்மை

சென்னையில் ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள நடைபாதைகளில் இருந்த கருங்கற்கள், சிமெண்டு கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு குப்பையில் வீசப்பட்டு, அதற்கு பதிலாக புதிய கிரானைட் கற்கள் பொருத்தப்படுகின்றன. ஏற்கனவே இருந்த கருங்கற்கள் மற்றும் சிமெண்டு கற்களினால் ஆன நடைபாதைகள் சிறுவர்கள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினரும் நடப்பதற்கு ஏதுவாக இருந்தது. இந்த நடைபாதைகள் மழைக்காலங்களிலோ அல்லது தண்ணீர் இருக்கும் இடங்களிலோ சறுக்காமல் பிடிமானத்துடன் இருந்தது.

ஆனால் தற்போது பளபளப்பான கிரானைட் கற்களால் அமைக்கப்படும் நடைபாதைகள் சறுக்கும் தன்மை உடையதாக உள்ளது. இதன் காரணமாக மூத்த குடிமக்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் நிலை தடுமாறும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு பயந்து பெரும்பாலான பாதசாரிகள் நடைபாதைகளில் நடக்காமல் சாலையின் ஓரமாக நடப்பதாகவும், கிரானைட் கற்கள் பதித்த நடைபாதை ஆபத்தானதாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மறுபரிசீலனை

ஏற்கனவே நல்ல நிலையில் இருந்த கருங்கற்கள் மற்றும் சிமெண்டு கற்களினாலான நடைபாதைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு குப்பை தொட்டியில் வீசப்படுவதாகவும், இதன் காரணமாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் இதுபோன்ற நடவடிக்கை அரசு பணம் வீண், பொதுமக்களுக்கு அச்சம் என்ற இரட்டிப்பு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்காக திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்ற கோட்பாட்டிற்கேற்ப மக்களின் வரிப்பணம் வீணாகக்கூடிய, விபத்துகளையும், அதன்மூலம் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேவண்டியது அரசின் கடமை.

எனவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதில் உடனடியாக கவனம் செலுத்தி, இதன் உண்மை நிலையை கண்டறிந்து பாதசாரிகளின் கருத்துகளையும் கேட்டறிந்து, அரசு பணம் வீணடிக்கப்படுவதை தடுக்கவும், பாதசாரிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story