சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் கிராம சுகாதார நர்சுகள் போராட்டம்


சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் கிராம சுகாதார நர்சுகள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Sep 2021 7:58 PM GMT (Updated: 21 Sep 2021 7:58 PM GMT)

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார நர்சுகள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார நர்சுகள் சங்கத்தினர், தங்களை தாய்சேய் நல பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து கிராம சுகாதார நர்சுகள் சங்கத்தினர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் கிராம சுகாதார நர்சுகள், பகுதி சுகாதார நர்சுகள், சமுதாய நல நர்சுகள் முழுநேரமாக தங்களது பணியை செய்து வருகின்றனர். இதனால், தாய்சேய் நலப்பணிகள் பாதிக்கப்படுகிறது. கிராம சுகாதார நர்சுகளை தாய்சேய் நல பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். நாங்கள் தினமும் 12 மணி முதல் 14 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுகிறோம்.

எங்களை 8 மணி நேரம் மட்டுமே பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடுத்தும் போது வாகனம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களிலும், பண்டிகை விடுமுறை நாட்களிலும் விடுமுறை வழங்க வேண்டும். கொரோனா தடுப்பூசி பணிக்கு ஓய்வுபெற்ற மற்றும் பயிற்சி முடித்த நர்சுகளை ஈடுபடுத்த வேண்டும். கிராம துணை சுகாதார நிலையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.


Next Story