வாணவெடிகள் இருந்த கார் வெடித்து சிதறியது 37 வீடுகள் சேதம்-உரிமையாளர் கைது


வாணவெடிகள் இருந்த கார் வெடித்து சிதறியது 37 வீடுகள் சேதம்-உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2021 8:42 PM GMT (Updated: 21 Sep 2021 8:42 PM GMT)

சாத்தான்குளம் அருகே வாணவெடிகள் இருந்த கார் வெடித்து சிதறியதில் 37 வீடுகள் சேதம் அடைந்தன. இதுதொடர் பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளை குமரன்விளையை சேர்ந்தவர் தானியேல் மகன் பாலகிருஷ்ணன் (வயது 44). இவர் நெல்லை மாவட்டம் அணைக்கரை அருகே அரசு அனுமதியுடன் வாணவெடிகள் தயாரித்தல் மற்றும் சேமிப்பு குடோன் வைத்து உள்ளார்.

நேற்று அதிகாலையில் பக்கத்து ஊரில் நடைபெற இருந்த ஒருவரின் திருமணத்திற்கு தனது காரில் ஏராளமான வாணவெடிகளை ஏற்றிக்கொண்டு தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் காரை வீட்டு வளாகத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

வெடித்து சிதறிய கார்

சிறிது நேரம் கழித்து காரில் இருந்த வாணவெடிகள் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்தது. இதனால் காரும் வெடித்து சிதறியது. குண்டு வெடித்ததுபோல் சத்தம் கேட்டதால் பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து தங்களது வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். மேலும், வெடித்து சிதறிய வாணவெடிகள், காரின் பாகங்கள் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளின் மீது விழுந்தது. இதில் அந்த வீடுகளின் சுவர், ஓடு, கண்ணாடி மற்றும் ஜன்னல்கள் சேதம் அடைந்தன. மொத்தம் 37 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் 7 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சேதம் அடைந்த கார் மற்றும் வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

உரிமையாளர் கைது

இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரின் வெப்பத்தால் வாணவெடிகள் வெடித்து சிதறியதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் வாணவெடிக்கு தீவைத்து சென்றனரா? என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இதுதொடர்பாக காரின் உரிமையாளர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

Next Story