ரூ.699 கோடியில் 6 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


ரூ.699 கோடியில் 6 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Sep 2021 10:24 PM GMT (Updated: 21 Sep 2021 10:24 PM GMT)

மகளிர் சுயஉதவி குழுக்கள், உற்பத்தியாளர், தொழில் குழுக்கள் உள்பட ரூ.699.26 கோடியில் 6 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 21-9-2021 அன்று (நேற்று) சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் சுயஉதவி குழுக்கள், உற்பத்தியாளர், தொழில் குழுக்கள் மற்றும் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பில் 6 லட்சத்து 926 பயனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வங்கி கடன்கள் வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஊரகப்பகுதிகளில் உள்ள 8,210 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.12.32 கோடி மதிப்பீட்டில் சுழல் நிதி, ஊரகப்பகுதியில் உள்ள 8,776 ஏழை, எளிய நலிவுற்றவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.10.97 கோடி நலிவு நிலை குறைப்பு நிதி, சுயஉதவி குழு ஒன்றுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் 13,255 குழுக்களுக்கு ரூ.66.28 கோடி சமுதாய முதலீட்டு நிதி, ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க 1,27,903 சுயஉதவி குழு மகளிருக்கு ரூ.64 லட்சம் நிதியுதவி, கிராமப்புற மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் கூடுதல் வருமானம் பெற நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவித்திட தலா 100 நாட்டுக் கோழிக் குஞ்சுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 3,936 சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.3.53 கோடி நிதியுதவியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், பால் உற்பத்தியை பெருக்குவதற்கு ஏதுவாக அசோலா தீவன உற்பத்தி செய்திட 4,043 மகளிருக்கு ரூ.2.02 கோடி நிதியுதவி, 186 ஆடு வளர்ப்பு வங்கிகள் அமைத்திட ரூ.1.86 கோடி நிதியுதவி, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு குறைந்த கட்டணத்தில் கருவிகளை வாடகைக்கு வழங்கும் வேளாண் கருவிகள் வங்கி அமைக்க 1,427 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.9.61 கோடி நிதியுதவி, 3 ஆயிரம் வேளாண் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தளவாடங்கள், சிறிய எந்திரங் கள், அடிப்படை கட்டமைப்பு மற்றும் மூலதன நிதி ஆகியவற்றிற்காக ரூ.4.82 கோடி நிதியுதவியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோல், சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் 985 நபர்களுக்கு ரூ.4.98 கோடி, 528 தொழில் குழுக்களுக்கு ரூ.23.36 கோடி, 76 ஒத்த விருப்பக் குழுக்களுக்கு ரூ.70 லட்சம், 1, 470 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.60.85 கோடி மற்றும் 43 சிறப்பு சுயஉதவி குழுக்களுக்கு ரூ.65 லட்சம் தொழில் தொடங்கிட வங்கி கடன் என மொத்தம் ரூ.698.86 கோடி நிதியுதவிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார்.

சமுதாய திறன் பள்ளிகள்

ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் பாரம்பரிய மற்றும் அதிக வருமானம் தரும் தொழில்களில், அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு, இளைஞர்களுக்கு பயிற்சியளித்து வேலை வாய்ப்பினைப் பெற்றுத்தர 18 ஆயிரம் இளைஞர்களுக்கு சமுதாய திறன் பள்ளிகள் மூலம் தொழில் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

23 மாவட்டங்களில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 23 சமுதாய திறன் பள்ளிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சி பெறுவதற்கும், தொடர்ந்து தொழில் செய்வதற்கும் தேவையான உபகரணங்கள் அடங்கிய தொழில் திறன் பயிற்சி பெட்டகத்தை ஒரு இளைஞருக்கு வழங்கினார்.

மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் 23 மாவட்டங்களில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் 23 சமுதாயப் பண்ணைப் பள்ளிகளை தொடங்கிவைத்து, இவர்கள் அனைவரும் பண்ணைப் பயிற்சி பெறுவதற்கும், தொடர்ந்து உற்பத்தியைப் பெருக்குவதற்கும் தேவையான உபகரணங்கள் அடங்கிய பண்ணைப் பயிற்சி பெட்டகத்தை ஒரு சமுதாயப் பண்ணைப் பள்ளிக்கு வழங்கினார்.

இளைஞருக்கு பணி

மேலும், தீன்தயாள் உபாத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், திறன் வளர்ப்பு பயிற்சி பெற்ற ஊரகப் பகுதியைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற 50 இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரிய பணி அமர்வு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு இளைஞருக்கு பணி அமர்வு ஆணையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் கே.கோபால், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ம.பல்லவி பல்தேவ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் பா.பிரியங்கா பங்கஜம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story