டாக்டர் கனிமொழி, ராஜேஷ்குமார் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்


டாக்டர் கனிமொழி, ராஜேஷ்குமார் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 21 Sep 2021 11:27 PM GMT (Updated: 21 Sep 2021 11:27 PM GMT)

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான 2 காலியிடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னை,

தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதைத்தொடர்ந்து 2 பேரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

கே.பி.முனுசாமியின் எம்.பி. பதவிக்காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி முடிவடைவதாக இருந்தது. அதுபோல வைத்திலிங்கத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு 2022 ஜூன் 29-ந்தேதி முடிவதாக இருந்தது. 2 பேரும் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த இடத்தை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.

தனித்தனி தேர்தல்

இரண்டு பதவிக்கான தேர்தலும் தனித்தனியாக நடத்தப்படுகிறது. அதாவது, கே.பி.முனுசாமியின் இடத்திற்காக தனி வேட்புமனுவும், வைத்திலிங்கத்தின் இடத்திற்காக தனி வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

எனவே தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு ஒன்று கூடுதலான எண்ணிக்கையில், அதாவது 118 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள கட்சி, 2 இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும். 118-க்கும் மேல் எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள ஒரே கட்சி தி.மு.க.தான். அதன்படி, 2 இடைத்தேர்தலிலும் தி.மு.க. தனது வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமாரை நிறுத்தியுள்ளது. தி.மு.க.விற்கே வெற்றி வாய்ப்பு என்பதால், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை.

வேட்புமனு தாக்கல்

இந்த மாநிலங்களவை இடைத்தேர்தலுக்காக தேர்தல் நடத்தும் அதிகாரியாக தமிழக சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் 15-ந்தேதி தொடங்கியது. முதல் வேட்புமனுவை சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன், சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி கி.சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

இந்த தேர்தல் தனித்தனியாக நடைபெறுவதால், வேட்பாளர்கள் அனைவரும் யார் இடத்திற்கான இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்? என்பதை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும். அந்த வகையில் கே.பி.முனுசாமியின் இடத்தில் போட்டியிடுவதாக பத்மராஜன் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று தி.மு.க. வேட்பாளரான ராஜேஷ்குமார், வைத்திலிங்கத்தின் இடத்திற்கும்; டாக்டர் கனிமொழி, கே.பி.முனுசாமியின் இடத்திற்கும் போட்டியிடுகின்றனர்.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...

அதற்கான வேட்புமனுவை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை செயலாளர் அறையில், தேர்தல் நடத்தும் அதிகாரி கி.சீனிவாசனிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தனர். வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு உறுதிமொழியை படித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, உதயநிதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போட்டியின்றி தேர்வு

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் இன்று. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. தி.மு.க. தவிர வேறு கட்சிகள் எதுவும் இந்தத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றே தெரிகிறது. 27-ந்தேதி (பிற்பகல் 3 மணி) வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளாகும். தி.மு.க. வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள 2 வேட்புமனுக்களும் திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு எழாத நிலையில், அவை 2 மட்டுமே ஏற்கப்பட்டு ராஜேஷ்குமார் மற்றும் டாக்டர் கனிமொழி ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு, 27-ந்தேதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு அதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

இதுவரை இந்த இடைத்தேர்தலுக்கு பத்மராஜன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், புஷ்பராஜ் சந்தகுரூஸ் ஆகிய 3 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களை 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாவிட்டால் 23-ந்தேதி வேட்புமனு பரிசீலனையின்போது அவை நிராகரிக்கப்பட்டுவிடும்.

Next Story