நீட் தேர்வை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும் - கமல்ஹாசன் அறிக்கை


நீட் தேர்வை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும் -  கமல்ஹாசன் அறிக்கை
x
தினத்தந்தி 22 Sep 2021 5:53 AM GMT (Updated: 22 Sep 2021 5:53 AM GMT)

சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.



சென்னை
இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

 “நீட் உயிர்கொல்லி தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ கே ராஜன் குழுவின் அறிக்கை. நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இந்த தேர்வின் தீவிளைவுகளை பட்டியலிடுகிறது. 

அதன்படி கிராமப்புற ஏழை மாணவர்கள் தமிழ் வழியில் பயின்று மருத்துவராகவும் கனவை இந்த தேர்வு சிதைகிறது. நீட்தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் எண்ணிக்கை 14 .44 சதவீதத்தில் இருந்து 1.7 சதவீதமாக சரிந்துள்ளது. இது சமூக நீதிக்கு எதிரான தேர்வு என்பதற்கு இந்த ஒரு புள்ளி விவரமே போதுமானது. நீட் தேர்வுக்கு பிறகு எம்பிபிஎஸ் படிப்பில் சிபிஎஸ்இ மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள்தான் அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளனர். 

நீட் தேர்வில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களின் 90% கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்றவர்கள். நீட் தேர்வில் பின்னால் இருப்பது வணிக நோக்கம் தான் என்பது நான் ஆரம்பம் முதலே சொல்லி வரும் ஒன்று . இந்த புள்ளிவிவரங்கள் அதை உறுதி செய்கின்றன. நாட்டிலேயே சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்டிருப்பது தமிழகம். நீட் நீடிக்குமானால் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு சிதையும்.

நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமிழ் வழியில் மேல்நிலை கல்வி பயிலும், மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது. உலகம் முழுக்க தாய்மொழிக்கல்வி ஊக்குவிக்கப்பட்டு வரும் சூழலில் நீட்தேர்வு தாய்மொழிக் கல்விக்கு எதிரான மனநிலையை வளர்கிறது. 

நகர்புறத்தில் பிறந்த பணவசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவராகும், வாய்ப்பினை உருவாக்கும். இந்த மற்றும் உயிர்க்கொல்லி தேர்வினை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். 

உண்மைகளை வெளிக் கொணர்ந்து சட்ட போராட்டத்திற்கான வழி வகைகளையும் ஆராய்ந்து சொன்ன ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவினருக்கு மக்கள் நீதி மய்யம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. குழுவின் பரிந்துரைகளின்படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story