மாயமான நில ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


மாயமான நில ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 22 Sep 2021 7:25 PM GMT (Updated: 22 Sep 2021 7:25 PM GMT)

தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலம் தொடர்பான ஆவணங்கள் திடீரென மாயமானது குறித்து நில நிர்வாகத்துறை ஆணையர் விசாரணை நடத்தி 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஜமீன் பல்லாவரத்தில் குரோம்லெதர் கம்பெனிக்கு சொந்தமான 1.79 ஏக்கர் நிலத்தை குவெண்டிதாசன் என்ற பெயருக்கு பட்டா மாற்றம் செய்து, கடந்த 2019-ம் ஆண்டு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராக பதவி வகித்த ராஜகுமார் என்பவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் முன்னாள், இந்நாள் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர்களை ஆஜராக உத்தரவிட்டு இருந்தனர்.

ஆவணங்கள் மாயம்

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தற்போதைய தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆஜராகி, ‘நிலம் தொடர்பான உண்மை ஆவணங்களை தேடியும் கிடைக்கவில்லை’ என்றார். முன்னாள் வருவாய் கோட்டாட்சியரான, தற்போது தர்மபுரி மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரியாக உள்ள ராஜகுமார் ஆஜராகி, ‘பட்டா மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தபோது உண்மை ஆவணங்கள் இருந்தன’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த நிலம் தொடர்பான ஆவணங்கள் திடீரென மாயமானது குறித்து நில நிர்வாகத்துறை ஆணையர் விசாரணை நடத்தி 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

எப்படி உத்தரவிட்டார்?

ஒரு நிலத்துக்கு பட்டா மாற்றம் செய்ய வட்டாட்சியருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் மட்டுமே, அதுகுறித்து செய்யப்படும் மேல்முறையீடு மனுவை வருவாய் கோட்டாட்சியர் விசாரிக்க முடியும். அவ்வாறு மேல்முறையீட்டு அதிகாரியான வருவாய் கோட்டாட்சியர் எப்படி பட்டா மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

விசாரணையை வருகிற அக்டோபர் 21-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Next Story