தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை


தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Sep 2021 8:56 PM GMT (Updated: 22 Sep 2021 8:56 PM GMT)

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா கொடுந்தொற்று நோயின் பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் 3-வது அலை குறித்த அச்ச உணர்வு பொதுமக்களியை இருந்து வருகிற சூழ்நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக்கொண்டு வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஓரளவு கட்டுக்குள் இருக்கின்ற சூழலில் உருமாறிய டெங்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களில் பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து, அதன் அடிப்படையில் இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

வருமுன் காப்போம்

தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்க இருக்கும் நிலையில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க சாலைகளில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதும், வீடுகளில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதும், தண்ணீர் தேங்கி உள்ள இடங்களில் பொதுமக்கள் நடப்பதை தவிர்ப்பதும் மிகமிக அவசியம் ஆகும்.

வருமுன் காப்போம் என்பதற்கேற்ப டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் கடமை மாநில அரசுக்கும், பொதுமக்களுக்கும் உண்டு.

அதிகாரிகளுக்கு அறிவுரை

எனவே இதில், முதல்- அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், பொது இடங்களில் சுகாதாரப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளவும் தக்க அறிவுரையை தொடர்புடைய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story