1,682 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு


1,682 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2021 11:03 PM GMT (Updated: 22 Sep 2021 11:03 PM GMT)

தமிழகத்தில் நேற்று 1,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 260 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 959 ஆண்கள், 723 பெண்கள் என மொத்தம் 1,682 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 194 பேரும், கோவையில் 235 பேரும், ஈரோட்டில் 130 பேரும், செங்கல்பட்டில் 110 பேரும், திருப்பூரில் 101 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் குறைந்தபட்சமாக தேனி, தென்காசியில் தலா 5 பேரும், பெரம்பலூரில் 4 பேரும், ராமநாதபுரத்தில் 2 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 90 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 285 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்தவகையில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட 15 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளது.

21 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 48 லட்சத்து 52 ஆயிரத்து 48 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 15 லட்சத்து 47 ஆயிரத்து 140 ஆண்களும், 11 லட்சத்து 3 ஆயிரத்து 192 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 26 லட்சத்து 50 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 98 ஆயிரத்து 870 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 82 ஆயிரத்து 570 முதியவர்களும் இடம் பெற்று உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 15 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 6 பேரும் என 21 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர். அதில் அதிகபட்சமாக தஞ்சாவூர், செங்கல்பட்டு, சென்னையில் தலா 3 பேரும், திருவாரூர், ராணிப்பேட்டை, ஈரோட்டில் தலா 2 பேரும் என 12 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. 26 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 ஆயிரத்து 400 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

1,627 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் நேற்று 40 ஆயிரத்து 912 ஆக்சிஜன் படுக்கைகள், 25 ஆயிரத்து 471 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 8 ஆயிரத்து 151 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 74 ஆயிரத்து 534 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,627 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 237 பேரும், சென்னையில் 176 பேரும், செங்கல்பட்டில் 128 பேரும், ஈரோட்டில் 134 பேரும் அடங்குவர். இதுவரையில் 25 லட்சத்து 97 ஆயிரத்து 943 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 17 ஆயிரத்து 27 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story