செல்போனில் மாணவியிடம் காதல் சேட்டை; ஆசிரியர் கைது


செல்போனில் மாணவியிடம் காதல் சேட்டை; ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 23 Sep 2021 6:15 AM GMT (Updated: 23 Sep 2021 7:01 AM GMT)

புதுக்கோட்டையில் பிளஸ்-1 மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இருந்து மேட்டுப்பட்டி செல்லும் சாலையில், மருப்பினி ரோட்டில் எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவிக்கு அந்த வகுப்பின் ஆசிரியர் சண்முகநாதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர், பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். 

இது தொடர்பாக கல்வி அதிகாரி ராஜேந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

பிளஸ்-1 மாணவியிடம் ஆன்-லைன், வாட்ஸ்-அப் மூலம் பாடம் நடத்தும் போது செல்போனில் இரட்டை அர்த்தத்தில் ஆசிரியர் சண்முகநாதன் பேசியுள்ளார். அவர் பணிக்கு சேர்ந்து சில மாதங்கள் தான் ஆனதாம். புகாரின் அடிப்படையில் உடனடியாக அவரை பணி நீக்கம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தரப்பில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். கல்வித்துறை தரப்பில் விசாரணை முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் ஆசிரியர் சண்முகநாதன் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story