நாகர்கோவில் மருத்துவ கல்லூரியில் 4 மாணவர்களுக்கு கொரோனா


நாகர்கோவில் மருத்துவ கல்லூரியில் 4 மாணவர்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Sep 2021 8:45 PM GMT (Updated: 23 Sep 2021 8:45 PM GMT)

நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனினும் தினமும் சுமார் 20 பேர் வரை தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்தநிலையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அதாவது கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று வந்தார். அதன் பிறகு அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. எனவே அவருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது.

4 மாணவர்களுக்கு கொரோனா

அப்போது சம்பந்தப்பட்ட மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மாணவர் சிகிச்சைக்காக வார்டில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கொரோனா பாதித்த மாணவருடன் தொடர்பில் இருந்த 100 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 3 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்களும் சிகிச்சைக்காக வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் 5 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story